Thursday, October 22, 2015

வாழ்க்கைத் திறன் பற்றி தெரிந்து கொள்ள யாருமே விரும்பவில்லையோ !!!


அவ்வப்பொழுது கல்லூரிகளில் மென்திறன் பயிற்சி நடத்த நண்பர் ஒய்ட் அவர்களுடன் போவதுண்டு. இந்த அளவில்எங்களுடைய பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக ஓர் எண்ணம். கல்லூரிகளில் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருப்பதில்லை. இத்தகையை பயிற்சிகளுக்குப் பணமும் மிகக்குறைவாக ஒதுக்கப்படுகிறது. நேரம் ஒதுக்குவதில் சிக்கல்இருக்கின்றது. இந்த வகுப்புக்களினால் கல்லூரிக்கு எந்த நல்ல பெயரும் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் மென் திறன் வகுப்புக்களில் என்ன சொல்லித்தருவார்கள் என்ற விபரம் பெற்றோர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இதையெல்லாம் தெரிந்திருந்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்ற கேள்விக்குப் பதிலும் இல்லை.

இருந்தாலும் இந்தத்துறையில் பலகாலமாக ஆர்வம் இருக்கும் எங்களுக்குப் புது முயற்சி ஒன்றை எடுத்தால் என்ன என்றுதோன்றியது. இன்றைய சமுதாயப் போக்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் போனால் மக்கள் பலவித இன்னல்களை சந்திப்பார்கள். அதற்காக் கல்லூரிகளில் வாய்ப்பைத்தேடி அலைந்தால் கிடைக்குமா என்பது கேள்விக்குறி. மேலாண்மையியல் என்ற ஒரு துறை சமீபத்தில் உருவானதே. அது பணம்சார்ந்த துறை என்பதாலும், கல்லூரிகளில் அதிகலாபம் ஈட்டும் வாய்ப்பை அள்ளித் தருவதாலும் இந்தத்துறை மிக வேகமாக வளர்ந்து விட்டது.

மக்கள் நலமாக வாழ்வதைப் பற்றிய அக்கரை இன்றைய பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடையாது. குறுகிய காலத்தில்அதிக வளர்ச்சி அடைந்து உலக அரங்கில் பேசப்பட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். கார்பரேட் சோசியல்ரெஸ்பான்சிபிலிடி என்ற அடிப்படையில், மருத்துவமனைகள் அமைப்பது , ஏதாவது அரசுப் பள்ளிக்கு ஒரு மதில் சுவரோ அல்லது கழிப்பறை வசதியோ செய்து கொடுப்பது என்பன போன்ற சிறுசிறுச் செயல்பாடுகளில் பணத்தைக் கொஞ்சம் செலவுசெய்கின்றனர். அவ்வளவே!

உணவு, உடல் நலம் மற்றும் மன நலம் பாதுகாப்பது என்பவை நம் கலாச்சாரத்தில் பூடகமாக இருந்த ஏற்பாடுகள். ஆனால்கார்பரேட் கலாச்சாரம், கோவில்கள் மேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் ஈர்ப்பு , சோதிடத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான நம்பிக்கை எல்லாமே ஒன்றாக இணைந்து நம்முடைய கலாச்சாரம் தொலைந்து வருகிறது.உணவில் அளவு மறந்தாகி விட்டது, ருசிக்காகவே உணவு என்றாகி விட்டது. நடைப் பயிற்சி மட்டுமே உடற்பயிற்சி என்று நம்பும் காலமிது. 50 மீட்டர் தூரம் போக இருசக்கர வாகனம். காலையில் எழுந்து கொள்ளும் பழக்கம் அனேகமாக இப்பொழுது நாற்பதைத்தாண்டி இருப்பவர்களுக்குப் பின்னால் மிகவும் அபூர்வமாகிவிடும் போல் உள்ளது. யோகா சிலருக்கு பெருமைப் பேச உதவும் ஒரு நடவடிக்கையாக மாறி இருக்கிறது. நோயாளிகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள் இன்றைய அன்றாட வாழ்வின் அத்தியாவசிம் என்றே ஊடகங்களின் வாயிலாகப் புதிய நம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய நிலையைப் பற்றி ஓரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால், கொஞ்சம் பேராவது வாழ்க்கையைச் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும், செல்வச் செழிப்புடனும் வாழ வழி பிறக்கும் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு.

இதன் எதிரொலியாக வாரம் ஒரு முறை இலவசமாகப் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவது என்று முடிவு செய்தோம். ஆதற்காக எங்கள் ஊரில் உள்ள சமுதாயக் கூடம் எங்களுக்குக் கிடைத்தது. அதை Friends Yoga Centre என்ற பெயரில் நண்பர் எசக்கிமுத்து அவர்கள் நல்லவிதமாகப் பராமரித்து வருகிறார். கொன்சிலர் அம்மாவும் அவர்தம் துணைவராகிய நண்பர் பலராமன் அவர்களும் எங்கள் நல்ல முயற்சிக்கு ஆதரவாக இந்த சமுதாயக் கூடத்தில் பயிற்சி வகுப்புக்கள் நடத்த இசைவுதெரிவித்தார்கள்.

காலத்தை இன்னும் தாழ்த்தாமல் சென்ற ஞாயிற்றுக் கிழமையே ஆரம்பித்து விடுவது என்று நான் கூற நண்பர் ஒய்ட்அவர்கள் அரை மனதுடன் இசைந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஊரில் உள்ள ஒரு பிரபலமானவரைக் கூப்பிட்டு ஆரம்பிக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் அதற்குச் செலவு செய்ய வேண்டியிருக்கும். மக்களிடம் இதற்கான வரவேற்பு என்ன என்பதை முதலில் தெரிந்து கொண்ட பின்னரே பிரபலங்களை அழைக்கமுடியும். இதைப் பற்றிய செய்தியை Facebook, Whatsapp, மற்றும் SMS மூலமாகக் கிட்டத்தட்ட 600 பேர்களுக்குப் பகிர்ந்து கொண்டேன். கவிஞர் செல்லா அவர்கள் திரு ஒய்ட் அவர்களின் நண்பர் என்பதால் அவர் வருகையை ஒய்ட் உறுதி செய்து கொண்டார். என்னுடைய நண்பர்களான திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களையும், திரு. ஒய்ட் அவர்களின் நண்பர்களான திரு தங்கராஜ், மற்றும் திரு . துரைராஜ் அவர்களையும் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்குவரும்படி கேட்டுக்கொண்டோம்.

18-10-2015 ஞாயிறு மாலை நல்ல மழை. சமுதாயக்கூடம் முன் கணுக்கால் மூழ்கும் அளவிற்குத் தண்ணீர். இருந்தாலும் சிரமத்துடன் நாங்கள் தொலைப்பேசிமூலம் தொடர்புகொண்ட நண்பர்களும், திரு இசக்கிமுத்து அவர்களும் வந்தார்கள்.பாடம் கற்றுக் கொள்ள யாரும் வரவில்லை.

கோவிலுக்குக் கூட பிரசாதம் வாங்குவதற்குத்தான் கூட்டம் வருகிறது. சொற்பொழிவுக் கேட்பதற்கு கூட்டம் வருவதில்லை.சிறந்த ஆன்மீகப் பேச்சாளர் வருவதாய் இருந்தால் அவருக்கான செலவைப் பகிர்ந்தளிக்கும் நண்பர்கள், அவர்தம் குடும்பத்தினர் போன்றவர்கள் வருகின்றனர். இங்கு அருகில் உள்ள கல்லூரியில் பலகாலமாக சைவச் சொற்பொழிவுகள் நடை பெறும். அதற்காகத் திருநகர் வரை ஒரு கல்லூரி பேருந்து இயக்கப்படும் என்பது எனக்குத்தெரியும். பேருந்து இலவசம் ஆயினும் மூத்த குடிமக்கள் ஒரு சிலர் மட்டும் அதில் ஏறிப் போவதை பார்த்திருக்கிறேன். நான் ஒரு முறை கூட கலந்துகொண்டதில்லை. மதம் சார்ந்த கருத்துக்களைப் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவேன். ஓரிருகூட்டங்களுக்குச் சென்று வந்த நண்பர் அங்கேயும் வடை காப்பி கொடுக்கப்படும் என்பதைச் சொன்னார். இலவசக் கூட்டமாகஇருந்தாலும் குறைந்த பட்சம் வடை காப்பியாவது கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் வருவார்கள் என்றகருத்தை முன் வைத்தார். அரசியல் கூட்டங்களுக்கு பிரியாணி மற்றும் குவார்டருக்கு உத்திரவாதம் உண்டாம்.

அன்று எந்த வகுப்பும் நடக்கவில்லை. நானும் நண்பர் ஒய்ட் அவர்களும் ஆளுக்கு ½ மணி நேரம் செயல் திறன் வளர்த்துக்கொள்ளும் முறைகள், மற்றும் மன அழுத்தம் குறைக்கும் வழிமுறைகளைப் பற்றி பேசக் கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டு வந்திருந்தோம்.

கூட்டமோ இரண்டு மணி நேர கலந்தாலோசனைக் கூட்டமாக நடந்தது. அன்று நாங்கள் கற்றவை இதோ.

1.கூட்டம் சேர வேண்டுமானால் ஓர் அமைப்பு வேண்டும். சங்கம், கழகம் அல்லது மன்றம் என்றிருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கூட்டத்திலும் சாப்பிட ஏதாவது கொடுக்கப் பட வேண்டும்.

3.கூட்டத்திற்கு வருபவர்கள் அமர்வதற்குச் சாய்வு நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்

4. இந்தச் செலவுகளை ஈடுகட்ட அங்கத்தினர்களும் சந்தாவும் வேண்டும்.


இத்தனைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமா? ஏற்பாடு செய்தால் அதில் சேரவிருக்கும் அங்கத்தினர்களின் நோக்கம் மென்திறன் வளர்த்துக் கொள்வதாக இருக்குமா? மறுபடியும் மனமகிழ் மன்றம், நற்பணி மன்றம் என்ற பாணியில் தான் செயல்பாடு இருக்கும். இதனால் இந்த மாதிரி சங்கம் அமைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏற்கனவே இருக்கும் சங்கங்களில்சேர்ந்துக் கூட்டத்திலே கோவிந்தாப் போட்டால் போதும். இதையெல்லாம் மீறி ஒரு வழியும் தென்படுகிறது. அதற்குச்செயல்வடிவம் கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதும் முடியவில்லை என்றால் வலைப்பதிவுகள் மட்டும் தான் ஒரே வழி.தெரிந்ததை எழுதி வைத்துவிடுவோம். சமுதாயம் படித்தால் படிக்கட்டும். தெரிந்ததைப் பதிவு செய்து விட்டோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். குறைந்தபட்சம் எம்முடைய மென் திறன் சிந்தனைகள் வளரும்.

No comments:

Post a Comment