Sunday, September 13, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 7- இறுதிப்பகுதி.

இயற்கை மருத்துவத்தின் படி அநேக நோய்களுக்கான அடிப்படைக் காரணம் உடலில் சேரும் கசடுகளும், நோய்கிருமியைஎதிர்க்கும் சக்தி குறைதலும் தான். தினம் தினம் உடலையும் மனதையும் நன்றாகப் பராமரித்து உடலுக்கு ஏற்றஉணவுகளைச் சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான முறையில் உட்கொண்டோமானால் நோய்வாய்ப்படுவதுகுறைந்து போகும்.

காலையில் வெறும் வயிற்றில் 750 மிலி முதல்1 லிட்டர் வரை குளிர்ந்த நீர் அருந்தும் பழக்கம் ஜீரண உறுப்புக்களையும், சிறுநீரகத்தையும் சுத்திகரிக் பெரிதும் உதவும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். இந்த எளியப் பழக்கம் அநேகமானநோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

குறைந்தது 6 சுற்றுச் சூரிய நமஸ்காரமும், ஒரு சில யோகாசனப் பயிற்சியும் பல உடல் உபாதைகளிலிருந்து நம்மைக்காக்கும். இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க, தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மற்றும் முகநூல் பிரவேஷம் முதலியவற்றைத் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும்.

சாப்பிடும் பொழுது தண்ணீர் அருந்தக் கூடாது. சப்பிட்டு முடித்து அரை மணி நேரம்கழித்து தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டஉடன் குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்ற மிகவும் குளிரூட்டப்பட்டவற்றை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள்தோன்றலாம். கேஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் ஜீரணக் கோளாறுகள் ஏற்படுத்தும். இதெல்லாம் கடைப்பிடித்தும் நோய் வந்தால் பின்வரும் முறைகளைக் கையாண்டு குணமடையலாம்.

அல்சர்: வெண்பூசனி பச்சையாகவோ தயிருடன் சேர்த்தோ சாப்பிட குணமாகும்.

இரத்த மூலம்: குப்பைமேனி இலையை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட குணமாகும்

மூட்டுவலி: விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், கடுகெண்ணெய்,புங்க எண்ணெய் ஐந்தையும்சரிவிகிதத்தில் கலந்து இரவில் படுக்கும் முன் வலி இருக்கும் இடத்தில் தடவிக்கொண்டு படுத்தால் குணமாகும்.

சாதாரணக் காய்ச்சல்: எந்த மருந்தும் தேவையில்லை. எனிமா எடுத்துக் கொண்டு, உண்ணா நோன்பு இருந்து படுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கக் காய்ச்சல் குணமாகுமாம்.

இரவில் வரும் வறட்டு இருமல்: மிளகுடன் தேன் கலந்து சாப்பிடக் கட்டுப்படும்.

இவ்வாறாக வீட்டிலேயே இருக்கும் எளிய மருந்துகள் பற்றி ஒரு சிற்றுரை நிகழ்த்தப் பட்டது. இதையெல்லாம் கேட்டுவிட்டுஎனக்குள் ஒரு கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. இதையெல்லாம் வீட்டில் வைத்துச் செய்ய முடியுமா என்பதுதான்அந்தக் கேள்வி. பன்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி ஃபேமிலி டாக்டர் என்று சொல்லப்படுகின்ற ஒருவரிடம் உடனேபோக வேண்டியிருக்கும்.

ஆனாலும் மூலிகை மருத்துவம் முடிந்த மட்டும் செய்து கொள்ளலாம். இதை இங்கே குறிப்பிடும் போது அரளி விதை,புகையிலை போன்ற இன்னும் பல விஷமூலிகைச் செடிகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலிகைமருந்துகளுக்கு சைட் எஃபெக்ட்ஸ் இல்லை என்ற கூற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. எல்லா உணவுகளுக்கும், எல்லாமருந்துகளுக்கு நேர்வினை, எதிர்வினை இரண்டுமே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உண்ணா நோன்பு முடிந்த இரண்டாம் நாள் இரவு உணவாக இரண்டு நாட்டு வாழைப் பழங்கள் கொடுக்கப்பட்டன. அடுத்தநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்த பின் தியானம். அதற்குப்பின் உடற்பயிற்சி, மற்றும் பிராணயாமம் சொல்லிக் கொடுத்தார்கள். 9.00 மணிக்கு ஊறவைத்த கடலை, இரண்டு வாழைப்பழம் மற்றும் ½ டம்ப்ளர் நெல்லிக்காய் சாறு கொடுக்கப் பட்டது. வாழையிலைக் கிடைக்காததால் வாழையிலைக் குளியல் மேற்கொள்ளும் வாய்ப்புஅமையவில்லை. எனவே குளியலறையில் குளித்துவிட்டு நாங்கள் ஒப்படைத்த சாமான்களைப் பெற்றுக் கொண்டு மதியஉணவாக வாழைப்பழம், அவல் மற்றும் பேரீச்சம்பழம் கலந்த களி, பப்பாளி ¼ பழம், சப்போட்டா இரண்டு, சீவிய கேரட் ஒரு கரண்டி எல்லாம் கொடுக்கப்பட்டது. வயிற்றுக்குப் போதுமானதாக இருக்க உணவு உண்டபின் ஊருக்கு கிளம்பத்தயாரானோம். முகாம் இலவசம் தான் என்றாலும் நன்கொடை கொடுக்கலாம் என்று கூறினார்கள். இத்தகைய சிறப்பானமுகாம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறி என்னுடைய திருப்திக்காக நன்கொடையும்அளித்துவிட்டுக் கிளம்பினேன்.

நண்பர் குமார் அவர்கள் தம்முடைய காரிலே என்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். நல்ல வெயில். செங்கோட்டைமதுரை பேசஞ்சர் ரயில் அரைமணி நேரம் கால தாமதமாக வந்தது. ரயிலில் ஏறியவுடன் கண்ட காட்சிகள் மனத்தைஉறுத்தியது. சிறுவனொருவன் பிளாஸ்டிக் டிபன் பாஃக்ஸைத் திறந்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடையதாயாரோ பச்சைப் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட கேஸ் பொங்கும் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார்.பயணிகள் வழி நெடுக்க சமோஸா வெள்ளரிப் பிஞ்சு, கடலைமிட்டாய் என்று எதையாவது தின்று கொண்டே பயணம்செய்கிறார்கள். உணவுப்பழக்கம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று பட்டது.

மருத்துவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வாங்கு வாழ இந்தச் சமுதாயம் தயாராகிவிட்டதை உணரமுடிந்தது. கோடிகொடுத்தும் மருத்துவப் பட்டம் வாங்க ஒரு கூட்டம் ஏன் அலைமோதிக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதில்கிடைத்தது.

முற்றும்

Sunday, September 6, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 6

உண்ணா நோன்பு தான் உடலை உட்புறம் சுத்தகரித்துக் கொள்ளும் முறை. உண்ணா நோன்பு முறையாக மேற்கொள்ள வேண்டிய ஒரு செய்முறை. இன்றைக்கே நினைத்து, இப்பொழுதே ஆரம்பித்துவிடக் கூடிய ஒன்றல்ல. உண்ணா நோன்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கும் முன் தினம் இரவு உணவு மிகவும் இலகுவான பழ உணவாக, இயற்கை உணவாக இருத்தல் அவசியம். புரோட்டா பிரியாணி, புளியோதரை, போலியல் என்று விருந்தில் சாப்பிடுவது போல் செம கட்டு கட்டிவிட்டு அடுத்தநாள் உண்ணாவிருதம் இருப்பது முறையல்ல.

உண்ணா நோன்பு நன்குமுறையில் மேற்கொள்ளலாம்
    1.   பழங்கள் மட்டும் சாப்பிட்டு நோன்பு இருப்பது
    2.பழச்சாறு மட்டும் குடித்து நோன்பு மேற்கொள்ளுவது
    3.  நீர் மட்டும் அருந்தி நோன்பு இருப்பது
    4. நீர் கூட அருந்தாமலும் எதுவுமே உட்கொள்ளாமலும் நோன்பு இருப்பது.

இந்த நான்கு முறைகளில் நான்காவது முறை யோகிகளால் மேற்கொள்ளப்படுவது. இந்த முகாமில் நாங்கள் மேற்கொள்ள இருப்பது மூன்றாவது முறை.

இரவு தூங்கச் செல்லும் முன் பல் துலக்கிவிட வேண்டும். பிறகு மனத்தில் அடுத்த நாள் நோன்பு இருக்கப் போவதை நினைவு படுத்திக் கொண்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.

இந்த வகையில் எங்களுக்கு இலகுவான உணவு வாழைப்பழமும், ஊறவைத்த நிலக்கடை கொஞ்சமும் கொடுக்கப் பட்டுவிட்டதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன், தலைக்குக் குளித்தோம். மல ஜலம் கழித்த பிறகு ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம். அன்றைக்கு முழுமையான மௌன விரதம். யாரிடமும் பேசவோ, தாமாகப் பாட்டை முனுமுனுக்கவோகூட கூடாது.எந்தப் புத்தகத்தையும் படிக்கக் கூடாது. தியானம் செய்யலாம் மற்றபடி படுத்து இருக்கலாம். தூக்கம் வந்தால் தூங்கிக் கொள்ளலாம். இடை இடையே தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். எந்தக் காரணம் கொண்டும் காலையில் பல் துலக்கக் கூடாது. பல் துலக்கினால், பல் பொடியின் சுவையே ஜீரண உருப்புகளின் செயல்பாட்டைத் துவக்கிவைத்துவிடும். 

மதியம் ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம், இப்படியாக மிக மெதுவாக பொழுது கழிந்தது. கிட்டத்தட்ட நாற்பது பேர், யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல், ஏன் ஒருவரை ஒருவர் சரியாகக் கூட ஏறெடுத்தும் பார்க்காமல் மேற்கொண்ட விராதம் ஒரு புது அனுபவம். ஆச்சரியம் என்ன வென்றால் பசி அவ்வளவாக உணரப்படவில்லை. மிகுந்த களைப்பாக இருக்குமோ என்றால், அதுவும் இல்லை. எல்லோரும் தெம்பாகத்தான் காணப்பட்டார்கள்.

மாலை 5.00 மணிக்கு நோன்பு முடிக்க வேண்டும். அதற்கு முன் ஒரு முறை இனிமா எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறைத் தலைக்குக் குளிக்க வேண்டும். எனவே 4.00 மணிக்கே இந்த ஏற்பாடுகளில் இறங்கிவிட்டேன். 4.30 மணிக்கு இந்த வேலைகள் முடிந்துவிடவே தங்குமிடத்துடன் கூடிய மொட்டைமாடிப் பகுதிக்குச் சென்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். மற்ற நண்பர்களும் வந்து விட்டதால் தங்கள் ஒவ்வொருவருடைய அனுபவம் பற்றியும் பேசிக் கொண்டோம். யாருக்கும் உண்ணா நோன்பு சிரமமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். பசியே ஒருநாள் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.

மாலை மணி 5.00. உண்ணா நோன்பு முடிந்ததற்கான அறிவிப்பாக மணியோசைக் கேட்டது. கீழே எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்த பானம் வழங்கப்பட்டது. எல்லோரும் மிகமிக நிதானமாக அந்தப் பானத்தை வாங்கி தரையில் அமர்ந்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினோம். உடல் மிக மிக சுத்தமாக இருப்பதாக ஒரு உணர்வு. இன்றைய பொழுதில் ஒரு முக்கிமான வைத்திய முறையான உண்ணா நோன்பை அனுபவித்து இது ஒன்றும் கடினமான ஒன்றல்ல என்று தெளிந்தோம். 

உண்ணா நோன்பு ஒரு மாதத்தில் இரண்டு முறை மேற்கொள்ளலாம்.ஏகாதசி, அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்கள் உண்ணா நோன்பிருக்க உகந்த நாட்கள். உண்ணா நோன்பு அனுபவங்கள் பற்றி திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ( ஆசிரியர் )பகிர்ந்து கொண்டோம். கிட்டத்தட்ட 120 கிலோ எடையுடைய மனிதர் ஒருவரும் இந்த முகாமில் கலந்து கொண்டிருந்தார். அவருக்குக் கூட, இந்த அனுபவம் எந்தச் சிரமமும் இல்லாத சிறந்த ஒரு அனுபவம் என்று அவர் கூறக் கேட்டோம். 

பிறகு இரவு உணவாக இரண்டு வாழைப்பழங்கள் மட்டும் 7.00 மணியளவில் எங்களுக்கு வழங்கப்பட்டது. இரவு உணவிற்குப் பிறகு இயற்கை மருந்துகள் பற்றிய விளக்க உரை. இந்த உரையின் வாயிலாக நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் பல பொருட்களின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டோம். நானும் மற்றும் சில நண்பர்களும் இந்த உரையைக் குறிப்பெடுத்துக் கொண்டோம். அடுத்தப் பதிவில் இதைப் பற்றி  நீங்கள் எதிர்பார்க்கலாம்.