Saturday, August 29, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 5

நம் முன்னோர்கள் 2500 வருடங்களுக்கு முன்னரே நெறிப்படுத்திய உடற்பயிற்சியைத் தான் அன்றைய மாலை வகுப்பில் யோகா குரு கணேஷ் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சிகள் நான் இந்த முகாமிற்கு வருவதற்கு முன்னாலிருந்தே தினமும் செய்து வருபவை. அன்றைய முகாமில் முதல் முதலாக செய்ய முயற்சிப்பவர்கள் படும் பாட்டைக் காண முடிந்தது. ஒரு முறை முயற்சித்துவிட்டு அப்பா ! அம்மா ! என்று பெருமூச்சுவிடுபவர்கள். இன்னும் சிலரோ நம்மால் முடியாது என்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்.

எனக்கு இந்த உடற்பயிற்சிகளின் பல்வேறு நிலைகளைப் பற்றி சிந்திக்க ஒரு அரிய சந்தர்ப்பம் என்னவோ அப்பொழுதுதான் வாய்த்தது போல் ஒரு நினைப்பு. இந்தப் பயிற்சிகளை நெறிப்படுத்திவர்கள் ஒருவராக இருக்க வாய்ப்பே இல்லை. நம் அன்றாட செயல்களைத் திறம்படசெய்து வாழ்கையை அனுபவிக்க நமது  உடல் எப்படியெல்லாம் வளைய வேண்டிவருமோ அந்த நிலைகளை ஆராய்ந்து, ஒவ்வொரு நிலையும் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த அரிய உடற்பயிற்சி நீங்களெல்லாம் கேள்விப்பட்டிருக்கும் சூரிய நமஸ்காரம் என்பதே ஆகும். இதன் பன்னிரண்டு நிலைகளையும் நீங்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் தென்பட்டாலும் அனேகமான நிலைகள் ஒரே மாதிரியாகத்தான் வெவ்வேறு பயிற்சி சாலைகளிலும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன..

நம்மில் பலருக்கு இருகைக் கூப்பி வணக்கம் செய்யக் கூட சரியாக வருவதில்லை. நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால் கோவிலுக்குச் சென்று ஒவ்வொருவரும் எப்படி சாமி கும்பிடுகிறார்கள் என்று பாருங்கள். நின்ற நிலையில் உள்ளங்கைகளைச் சேர்த்து வலது கையின் ஒவ்வொரு விரலும் மிகச் சரியாக இடதுகையின் அதன் ஜோடி விரலுடன் ஒட்டி, விரல்கள் அனைத்தும் வானத்தை நோக்கி இருக்கும்படி எத்தனைப் பேரால் சாமி கும்பிட முடிகிறது. கட்டைவிரல்கள் மார்பைத்தொடுகின்றனவா? இந்த நிலையில் சரியாக நின்று கண்களை மூடி அமைதியாக நிற்கும் போது நெஞ்சுக் கூடு விரிந்தநிலையில் இருப்பதால் நல்ல சுவாசமும் அமைதியும் கிடைக்கும்.இதனால் மனதில் ஒரு தெளிவுபிறக்கும். இதை செய்ய முடிந்தால் சூரிய நமஸ்காரத்தில் ஆரம்ப நிலையை நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டீர்கள். உங்களுக்கு நீங்களே நூற்றுக்கு எட்டு மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளுங்கள்.
 
அடுத்தடுத்த நிலைகள், உங்கள் முதுகுத்தண்டு முன்னும் பின்னும் முழுவதுமாக வளைய பயிற்சி அளிக்கிறது. பலர் தங்கள் காலடியில் கீழே கிடக்கும் பொருட்களை கூட குனிந்து எடுப்பதற்கே சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த மனப்பான்மை சட்டென மாற இரண்டாம் மூன்றாம் நிலைகள் உதவும். அடுத்த 4வது நிலை நீங்கள் படி மற்றும் உயரமான இடைத்தில் ஏற உங்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் கொடுக்கும்.


அதற்குப் பின் செய்யப்படும் 5,6,7 மற்றும் 8வது நிலைகள் தாம்பத்தியத்திற்குப் பெரிதும் உதுவும் நிலைகள். இன்றைய வாழ்க்கை முறையில் பலபேருடைய வேலை உட்கார்ந்திருந்து செய்யக் கூடியதாக இருக்கிறது. இதனால் இடுப்புப்பகுதி வளையும் தன்மையை வெகுவாக இழந்தும் விடுகிறது. அப்புறம் தாம்பத்தியம் எங்கே சுகப் படப் போகிறது!!


9வது நிலை அமர்ந்த நிலையிலிருந்து விருட்டென எழுந்துகொள்ள உதவும். தம்பி மாமாவுக்கு அப்படியே ஒரு கைகொடுத்துத் தூக்கிவிடு என்று யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை. 10 வது நிலை 4 வது நிலை போல ஆனால் 4 வது நிலையில் இடதுகால் முன்னால் என்றால் 10 வது நிலையில் வலதுகால் முன்னாலிருக்க வேண்டும். 11,12 வது நிலைகள் முறையே 3 மற்றும் 2 வது நிலைகளே.  

இந்த 12 நிலைகள் அடங்கியது ஒரு சுற்று. இப்படி பன்னிரண்டு சுற்று செய்ய முடிந்தால் உங்களுடைய தோற்றம் நிச்சயமாகப் பொலிவாக இருப்பதுடன், நீங்கள் உங்களை அதிக சக்திவாய்ந்தவராக உணர்வீர்கள். மேலோட்டமாக என்ன நடக்கிறது என்று சொல்லிவிட்டேன். உடலின் உள்ளேயும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு ஒவ்வொறு புலன்களின் அனுபவமும் சிறப்பாக இருக்க வாழ்வை முழுமையாகச் சுவைப்பீர்கள்.

திருமணமானவர்களுக்கு வாழ்வில் சௌபாக்கியம் என்பதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் விளங்கும். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எந்த ஒரு உபகர்ணமும் தேவையில்லை, எந்த விளையாட்டுத்திடலும் தேவையில்லை. தேவை ஒரே ஒரு விரிப்பு மட்டுமே. நடைபயிற்சி, ஜிம்மில் பயிற்சி எல்லாம் ஜுஜுபி. உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஐம்பது வயதைக் கடந்த ஒரே வயதுடைய யோகாகுருக்களையும் ஜிம் மாஸ்டர்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்..

இந்தப் பயிற்சி முடிந்த பிறகு கைகால் முகம் கழுவிவிட்டு இரவு உணவு சாப்பிடச் சென்றோம். சுமார் 75 கிராம் எடை அளவில் நீரில் ஊரவைத்த நிலக்கடலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கொஞ்சம் பாசிப்பயறு, இரண்டு நன்றாகப் பழுத்த நாட்டு வாழைப் பழங்கள் இவை மட்டுமே இரவு உணவு.

பிறகு அடுத்த நாள் மேற்கொள்ளவிருக்கும் இயற்கை மருத்துவத்தின் மிக முக்கியமான உடலை உட்புறம் சுத்தகரித்துக் கொள்ளும் முறைகளப் பற்றியும் மற்றும் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் முறையைப் பற்றி 
திரு. பாலு அவர்கள் விரிவான விளக்கஉரை நிகழ்த்தினார். நாளைப் பொழுது மிகக்கடுமையாகக் கழியுமோ என்ற ஐயப்பாடு மனதை வதைத்தது.

தொடரும்..

3 comments:

S.Venkatachalapathy said...

வாழ்க்கைச் சுவைக்க என்ன செய்தாக வேண்டும் என்று தெரிந்து கொள்ள 3 நிமிடம் நேரம் ஒதுக்கி கொஞ்சம் படித்துத் தான் பாருங்களேன்.

Unknown said...

சூர்யநமஸ்காரம் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

S.Venkatachalapathy said...

அடியில் கண்ட வீடியோ இணைப்பை சொடுக்கி சூரிய நமஸ்காரம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். தக்க ஆசான் முன்னிலையில் பயிற்சி தொடங்க வேண்டும். பூரண நிலை அடைய மாதங்கள் பல ஆகலாம்.

https://www.youtube.com/watch?v=tZVhIzidcLo

வாழ்த்துக்கள்.

Post a Comment