Thursday, March 20, 2014

போட்டியும் வெற்றியும்




ராஜேந்திரனுக்கு போட்டிப் போடுவதில் என்றைக்கும் விருப்பம் இருந்ததில்லை.  +2 தேர்வை எதிர் நோக்கியிருக்கும் இவனுடைய போக்கு இவனின் பெற்றோருக்கு விசித்திரமாய் தானிருந்தது. இருந்தாலும் இவனுடைய திறமை மீது என்றுமே சந்தேகம் இருந்ததில்லை.

இவனிடம் யாரேனும் நன்றாகப் படி என்று கூறினால் சரியென்று தலையசைப்பான். முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்று யாராவது கூறினால் வினோதமாக ஒரு பார்வை பார்ப்பான். முதல் மதிப்பெண் வாங்குவது என்ற எண்ணத்திலிருக்கும்   அகங்காரம் இவனுக்குப் பிடிப்பதில்லை.அனால் நூற்றுக்கு நூறு வங்குவதிலுள்ள சந்தோஷம் மிகவும் பிடிக்கும்.

பொறியியல் பயில வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும்  உண்டு. ஆனால் இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிலையங்களில் சேர போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும் என்பது அறவே பிடிப்பதில்லை. கல்வி என்பது ரசித்துப் படிப்பது. அதைப் போய் போட்டியில் ஜெயிக்கப் படித்தால் போட்டியின் விதிகளுக்கு இணங்க ஒரு குறிப்பிட்ட திறமையை வளர்த்துக் கொள்வதில் நேரமும் பணமும் விரயமாகும். 

போட்டியில் வெல்வது மிகச்சிலருக்கே சாத்தியம். தோற்றவர்களுக்கு அவர்களுடைய இழப்பு மிகுந்த மன  உளச்சலை தருவது. இந்த தோல்வியும் மன உளச்சலும்  தேவையில்லாத ஒன்று என்று கருதுவதால்  இவன்  போட்டித் தேர்வுகளில்  பங்கு பெருவதை விரும்புவதில்லை.

இந்த எண்ணத்தால் நேர விரயத்தைத் தவிர்த்து தன்னுடைய பாடங்களில் முழு கவனம் செலுத்தி படிக்கலானான்.

தேர்வுகளில் எல்லா பாடங்களில் கேட்கப்பட்ட வினாக்கள் இவனுக்கு மிகவும் எளிதாக  இருந்தன. பல மாணவர்கள் வேதியியலும் இயற்பியலும் மிகவும் கடினம் என்றார்கள். இந்த வினோதம் ஏன் என்று இவனுக்கு விளங்கவில்லை.

மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டவுடன், இவனுக்கு எல்லாவற்றிலும் மிகச் சிறந்த மதிப்பெண்கள் கிடைத்திருந்தன. சிறந்த மதிப்பெண் இவனுக்கு தமிழகத்தில் மிகச் சிறந்த கல்வி நிறுவனமொன்றில் பொறியியல் பட்டப்படிப்பிற்கான இடத்தைப் பெற்றுத் தந்தது. 

நன்றாக பட்டப்படிப்பை முடித்த இவனுக்கு மீண்டும் வேலைக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் விருப்பமே இல்லை. இருந்தாலும் இவனுடை பொறியியல் மதிப்பெண்களை வைத்து ஒரு நிறுவனத்தில் வேலைக் கிடைத்தது. தொழிலில் இவனுடைய ஈடுபாடும் திறமையும்  இவனுக்கு மிகுந்த முன்னேற்றத்தைத் தந்தன. மிகவும் சிறிய வயதிலே மேலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இன்றைக்கும் இவன் யாருடனும் போட்டி போடுவதில்லை. எனவே இவனொரு சிறந்த தலைவனாக உலாவருகிறான். எல்லோருக்கும் இவனைப் பிடிக்கும். போட்டி இல்லாத வாழ்க்கை என்றும் சுகமானதே என்பதை தினமும் நிருபித்துக் கொண்டிருந்தாலும் இந்த சமூதாயம் என்னமோ போட்டிகளில் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கிறது.   




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிலை - உண்மை...

Post a Comment