Sunday, March 11, 2012

அஷ்டாங்க யோக முறையில் இன்றைய தினசரி வாழ்க்கை..

அஷ்டாங்க யோகம் என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்கான பயிற்சி முறைகள் என்ற நம்பிக்கை வேரூன்றிவிட்டது. மனித நல் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவைகளாக இன்றைய நாட்களில் கருதப்படுபவை பணமும் பணத்தால் வாங்க முடிகிற அத்துனை பொருட்களும். சிறந்த வாழ்க்கை என்பது, நல்ல வசதி, சிறந்த வீடு, எல்லாவிதமான வீட்டு உபயோகப்பொருட்க்கள், சிறந்த ஆடைகள் அணிகலன்கள், வெளியே போய்வர சொந்த வாகனங்கள், அவ்வப்பொழுது இன்பச் சுற்றுலா, ஆடம்பரமான விஷேசங்கள் போன்றவைகள் தான் என்று மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மிகச் சிறந்த மருத்துவமனை, அறுவை சிகிச்சை, விலை உயர்ந்த மருந்துகள் என்று மக்கள் தேடிச்செல்லும் நிலையும் வாழ்க்கைமுறையாகி விட்டது.

ஒருவரின் வாழ்க்கைமுறையை அஷ்டாங்க யோக அணுகு முறையில் வகுத்துக்கொள்ள முடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கையில் இன்றைய நிலையிலும் சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள சிறப்பான வழிமுறையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று புலப்படுகிறது.

மனிதன் எட்டு பகுதிகளின் சேர்க்கை என்ற ஞானம் வேதகாலத்திலிருந்தே உணரப்பட்டது. இதனைப்பற்றிய விளக்கம் பகவத்கீதையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நீர், நிலம், காற்று, வெளி,நெருப்பு மற்றும் மனம், அறிவு, புத்தி என்ற எட்டு தான் ஆன்மா உறையும் இடம்.

ஆன்மாவானது சிறந்து வாழ எட்டு பகுதிகளையும் முறையாக பயன்படுத்தவும் பராமரிக்கவும் வேண்டும். இதற்கான பயிற்சிமுறைகள் அஷ்டாங்க யோகத்தின் பகுதிகள்.

அஷ்டாங்க யோகத்தின் பகுதிகள்

  1. இயமம்
  2. நியமம்,
  3. ஆசனம்,
  4. பிரணயாமம்,
  5. பிரத்தியாகாரம்,
  6. தாரணை,
  7. தியானம்,
  8. சமாதி

இயமம் என்பது நம்முடைய உடலைப்பராமரிக்கும் முறைகள். தூங்கும் நேரம், கால அளவு, உடல் தூய்மை, அணியும் ஆடைகள், உண்ணும் உணவு,இருப்பிடம் என்பவைகளை முறைப்படுத்துதல். இதில் முறைகேடுகள் இருந்தால் சரி செய்ய அதிக சக்திவிரயமாகும். மனமும் வசப்படாது.

நியமம் என்பது நேர்மையான வாழ்க்கைமுறை. அநியாயங்கள், களவு, அடக்குமுறை, ஏமாற்றுதல், பித்தலாட்டம் வெறித்தனமான பற்று, எதற்கெடுத்தாலும் கோபப்படுதல், அதிகமாக அச்சப்படுதல், காமத்தைச் சரியாக புரிந்துகொள்ளாமல் செயல்படுதல் போன்றவற்றைத் தவிர்த்து வாழக்கற்றுக்கொள்வது. இந்த வாழ்க்கைமுறை ஒன்றும் சிரமமானதல்ல. இருப்பினும் சிரமமானதாகச் சித்தரிக்கப்பட்டு வருவது.

ஆசனம் என்பது உடற்பயிற்சிகள் அடங்கியவை. இப்பொழுதெல்லாம் உடற்பயிற்சி என்றால் 15 நிமிட நடைபயிற்சி போதும் என்றும், அதற்காக டிரட் மில் போன்ற சாதனங்கள் வாங்கிவைத்துக் கொண்டு பெருமைப்படுவது என்றாகி விட்டது. டிரட் மில் பழுதடைந்தால் பயிற்சி செய்ய முடியாது என்ற நிலை. காலுக்கு மட்டும் உடல் பயிற்சி, ஒரு சில கலோரிகள் உடம்பில் நீங்கிவிட்டால் உடல் சீராகிவிடும் என்ற நம்பிக்கை வளர்ந்து விட்டது. மேலும் பலப் பல உபகரணங்கள் சந்தைப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த முறைகளையெல்லாம் காட்டிலும் உபகரணங்கள் ஏதுவுமின்றி முழு உடலுக்கும் முழுமையான பயிற்சி அளிப்பவை யோக ஆசனங்கள். முழுக்க முழுக்க விஞ்ஞான அடிப்படையில் நம் முனிவர்கள் உருவாக்கிய அற்புதப் பயிற்சிகள். உடலைப்பற்றிய மிகச்சிறந்த ஞானம் பெற்ற நம் முன்னோர்கள் நெறிப்படுத்திய ஈடு இணையற்ற பயிற்சி முறைகள். இந்த பயிற்சிகளை வித்தை என்ற ரீதியில் சித்தரித்து ஒரு கூட்டம் பெயர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

உண்மையிலே யோகாசனப் பயிற்சிகள் அப்படியொன்றும் சிரமமானவைகள் அல்ல. பல வருடங்கள் யோகாசனம் செய்துவரும் என் போன்றோர்கள் இதை நன்கு அறிவர். சிராமமில்லாமல் அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சர்வாங்க ஆசனமும் சிரசாசனமும் செய்வதைப் பார்த்துவிட்டு நம்மால் முடியாது என்று முடிவெடுப்பது அறியாமையிலும் அறியாமை. முதலில் சூரிய நமஸ்காரம் செய்யப்பழகிக் கொள்ளலாம். அதுவே அதிக நன்மை பயக்கும்.

அடுத்தப் பகுதி பிராணயாமம். இதில் பல விதமான மூச்சுப்பயிற்சிகள் அடக்கம். நம்முடைய மனத்தை உள்நோக்கி திருப்ப உதவும் சிறப்பான எளிய வழியும் நம்முடைய சுய ஆத்ம தரிசனம் செய்ய நம் முன்னோர்கள் உணர்ந்தருளிய மிக எளிய பயிற்சி முறைகள் பிரணயாமத்தில் அடங்கும்.

பிரணயாமம் குறித்து மேலைநாடுகளில் மேற்க்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. மனத்தெளிவற்று, பய உணர்வுடன் நிம்மதி இல்லாமல் அலைபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

பிராணயாமத்திற்கு அடுத்தயோகம் பிரத்தியாகாரம். இதைப்பற்றி பல மாதிரியான விளக்கங்கள் காணப்படுகின்றன. எல்லாமே கொஞ்சம் குழப்பமாக இருக்கின்றன. பிரதி+ஆகாரம் என்று பிரித்துப்பார்த்தால் மிக சிறந்த யோக நிலை புலப்படுகிறது. பிரதி என்றால் நகல், ஆகாரம் என்றால் உருவம். தம்மை ஒரு நகல் உருவமாக உருவகம் செய்து கொண்டு தம்முடைய செயல்களை ஆராய்வது பிரதியாகாரம் என்று பொருள் கொள்வோம்.

நம்முடைய செயல் பாடுகள் பல நேரங்களில், நம் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் மற்றும் சூழ்நிலை அல்லது பிறரின் நிர்பந்தம் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை அனைத்தையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்தாலொழிய நம்முடைய செயல்களை நெறிப்படுத்துவது முடியாத காரியம்.இவற்றை ஆராய நம்மிலிருந்து ஒரு பிரதி உருவமாக நாமே மாறி ஆராய்வது பிரத்தியாகரம் என்ற கருத்து மிகச்சரியாகப் படுகிறது.

அடுத்த நிலை தாரணை. தாரணையென்றால் ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள்படும். நாம் பிரத்தியாகார நிலையில் நின்று நம்மையே ஆராய்ந்து கொள்ளும் பொழுது சில நிறை குறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நம்முடைய வாழ்வில் நாம் கொண்டுள்ள நோக்கத்தையும்,கடமைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரத்தியாகாரம் மற்றும் தாரணை மூலமாகத்தான் நம்முடைய அன்றாட செயல்பாடுகளை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.

தியானம் என்ற அடுத்த யோகம் கவனித்தல் என்ற பொருளுடயது. சிறந்த அறிவாற்றல் நம் மனம் அமைதியான நிலையில் இருக்கும்பொழுது வெளிப்படும். மனத்தின் கவனிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியே தியானம். ஒவ்வொரு கணத்திலும் கவனிக்கும் திறமையை வளர்த்துக்கொண்டால் மனம் தானாக அமைதியடையும். அமைதியில் பல நுணுக்கங்கள் புரியும். இதைத்தவிர ஞானம் என்ற இலக்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் பல ஞானிகள் ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஞானம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்கின்றனர். புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் பிறந்தது என்று பாட நூல்களில் படித்திருக்கிறேன். ஒருக்கால் தம்முடைய வாழ்வின் இலட்சியத்தை அவர் போதிமரத்தடியில் அமர்ந்து பிரத்தியாகாரம் மற்றும் தாரணைகளை தியானித்து ஒரு முடிவெடுத்ததைத்தான் ஞானம் என்று சொல்கிறார்கள் போலும். அவரே, தான் ஞானம் அடைந்துவிட்டதாகக் கூறியிருப்பதை இன்றுவரை நான் படித்ததில்லை.

பிரணயாமப் பயிற்சியே ஒரு தியானம் தான். புத்தர் கூறும் எழிய தியானம் நம்முடைய மூச்சை நாமே கவனிப்பது. ஓம்காரம் ஜபித்து அதன் ஒலி நம் உடலில் இருந்து கிளம்புவதைக் கவனிப்பதும் ஒருவகைத் தியானம். இதில் ஜபித்தலைக் காட்டிலும் கவனிப்பதுதான் முக்கியம்.

இவ்வாறான அகநிலை தியானத்தில் இடையே மனம் அலைபாயாது நிலைகொண்டு எண்ணமில்லாத நிலையிலிருக்கும் நிலை சமாதி.
சம+ஆதி என்று பொருள் கொள்ளலாம். சமாதி நிலை அடைந்த பிறகு அகநிலைத் தியானத்தை நிறுத்திவிட வேண்டும். இல்லையேல் மனம் அதிலே சுகம் காணப்பழகிவிடும். உலக வாழ்க்கைப் பிடிக்காமல் போகலாம்.

இந்தப் பயிற்சிக்குப் பிறகு சக்தி உபாசனையான கயத்திரி மந்திரம் புறநிலை தியானமாக செய்து பயிற்சிகளை நிறைவு செய்தால் நல்ல பலன் உண்டு.

இதுவரை விளக்கப்பட்ட வழிமுறைகளைச் சுருக்கமாய் தொகுத்துத்துப் பார்ப்போம்.

பழக்க வழக்கங்களை தேர்வு செய்து கொள்ளுதல் இயமம்.

வாழ்க்கையில் தொழிலையும், கடமையையும் நியாமான வழிகளில் தொடர்வது நியமம்.

உடல் பராமரிப்பு ஆசனமும், பிராணயாயமும்.

இயம, நியமத்தை சீராக்குவது பிரத்தியாகாரம்.

தன்னைத்தானே உணர்ந்து ஏற்றுக்கொள்வது தாரணை.

ஞானத்திற்கான பயிற்சிகள் பிராணயாயமும் தியானமும். ஓம் ஜெபித்து அதன் ஒலியை நம்முள் அகத்தில் கவனித்து பயிற்சி மேற்கொள்ளுதலும், நம்முடைய மூச்சை நாமே கவனிக்கும் பயிற்சியும் அக நிலை தியானம், காயத்ரி மந்திர ஜபம் புற நிலைத் தியானம்.

சமாதி நிலை அகத்தைத் தொட்டுவருவது.

இயமம்,நியமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் நாள் முழுவதும் நம்முடைய வாழ்வின் இலட்சியப்பயணத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள். இம்முறையில் நாம் செயல் படுவது தான் கர்ம யோகம்.

பசி, தாகம், உடல் அசுத்தத்தால் அசௌகரியம் இவைகள் இயமத்தால் வசப்பட, நியமத்தால் மனம் சலனமில்லாமல் இருக்க, பிரத்தியாகாரம் சிறந்த செயல் பாட்டு முறைகளை வரையருக்க உதவ, தாரணை, செய்யும் செயல்கள் அத்தனையையும் மனம் விரும்புவதாக ஆக்கிக்கொண்டு செயல்பட உதவும். செயல் பாட்டில் முழுக்கவனம் தியான நிலை. இந்த நிலையில் மேற்கொள்ளும் செயல் பாட்டின் தன்மைக்கும் பலனுக்கும் ஈடேதும் இல்லை.

ஆசனம், பிரணயாமம், அகநிலை, புறநிலை தியானப் பயிற்சி மற்றும் சமாதி இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செய்ய வேண்டிய பயிற்சிகள்.

இவ்வாறாக அஷ்டாங்க யோக அடிப்படையில் தினசரி வாழ்வை அமைத்துக் கொள்வோமானால் நிறைவான வாழ்வு வாழ முடியும்.

இந்த முயற்சியில் நான் ஈடுபட்டு பல காலமாகிவிட்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். முடிந்தால் உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்து உங்கள் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்லுங்கள்.


Saturday, January 7, 2012

டாக்டர்களுக்கு ஏன் இந்த சோதனை ?


முன்பெல்லாம் டாக்டர்களை மக்கள் தெய்வமாக கருதினர். இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை என்று டாக்டர்களே உணரத் தொடங்கியிருப்பது நல்லதோர் மாற்றம். மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். டாக்டர்கள் தம் இஷ்டம் போல் செயல்படுவதைக் கைவிட்டுவிட்டு நோயின் தன்மை என்ன. அதற்கு எந்த வகை சிகிச்சை சிறந்தது, சிகிச்சை அளிக்கும் பொழுது ஏற்படக் கூடிய சிக்கல்கள், பின்விளைவுகள் போன்றவைகளைத் தெளிவாக விளக்கிச் செயல்படும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த அணுகுமுறை எதுவுமே இல்லாமல், சில டாக்டர்கள், அறுவை சிகிச்சையை அவசரகதியில், பணம் கிடைத்தால் போதும் என்ற மனத்துடன் செய்துவிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள்.

சமீபத்தில் தூத்துக்குடியில் மகப்பேரு மருத்துவ நிபுணர் கொலை செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை தான். இது குறித்து மருத்துவ உலகமே மிரண்டுபோய் இருக்கிறது. பழியைக் காவல்துறை மீதும், அரசு நிர்வாகம் மீதும் போட்டுவிட்டு நாடு தழுவிய போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த மாதிரி நிலை ஒவ்வொரு மருத்துவருக்கும் நேர்ந்துவிடக்கூடும் என்ற பயத்தை ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளத் தயாராக இல்லாத மருத்துவர்களையும் பணி செய்யவிடாமல் முடக்கியிருப்பது அப்பாவி மக்கள் பலரை மிகவும் பாதிப்பதாக உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் இவர்கள் சாதிக்க நினைப்பது என்னவென்றே புரியவில்லை.

மாறிவரும் உலகில் மருத்துவர்கள் தம்மை உளவியல் ரீதியில் தயார் படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். பெரும் பொருள் ஈட்டுவதற்கு மருத்துவம் சரியான துறையல்ல. அதிக விலைகொண்ட கார்கள், பட்டுப்புடைவைகள் இவையெல்லாம் கௌரவத்தின், தற்பெருமையின் அடையாளங்கள். பெருமையை பிரதிபளிக்கும் பொருட்களுக்கு எந்த விலை வேண்டுமானாலும் வைத்து விற்கலாம். சமூதாயம் பாதிக்கப்படாது. ஆனால் மருத்துவத்திற்கு இப்படி விலை நிர்ணயம் செய்யக்கூடாது. மருத்துவம் படித்த பின்பும் பணம் தான் பிரதானம் என்ற எண்ணத்தை விடமுடியவில்லை என்றால் மேற்கூறியது போன்ற கௌரவப்பொருட்கள் வியாபாரத்திலும், நெட்வொர்க் மார்க்கெட்டிங்க் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலும் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டியது தான்.

மருத்துவரை அணுகுபவர்கள் மிகுந்த உடல் உபாதைகளுடன், மன வருத்தத்துடன், எதிர்காலம் குறித்த கேள்வியுடன் அணுகுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது டாக்டர்களின் தலையாய கடமை. அதை விடுத்து அந்தச் சூழ்நிலையைப் பயன் படுத்தி எவ்வளவு பணம் கறக்கமுடியுமோ அவ்வளவு கறப்பது என்ற மனநிலையுடன் சில மருத்துவர்கள் செயல் படுவதால், ஒட்டு மொத்த மருத்துவ உலகமே இந்தப்பழியை தாங்கி நிற்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று மனிபால் MAHE நிகர்நிலைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மற்றும் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் Prof.Dr. B.M. ஹெக்டே அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மருத்துவத்தைப் பற்றி பொதுமக்களும் புரிந்து கொள்ளும் படிக்கு பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை மிகவும் தைரியமாக வெளியிட்டிருக்கிறார். மெடிக்கல் ஷாப் வைத்துக் கொள்வது, லேபரட்டரிக்களுடன் டீல் வைத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை டாக்டர்கள் கைவிட வேண்டும்.

பொதுவாகவே பலமருத்துவர்கள் மனிதர்களை நோயளிகளாகத் தான் பார்க்கிறார்கள். ஒருவரைப் பற்றி நினவுகூறும் பொழுதுகூட அவர் என் பேஷன்ட் என்று டாக்டர் நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். நாசுக்காக இந்த போக்கு சரியல்ல என்று உணர்த்த முயற்சி செய்துமிருக்கிறேன்.

டாக்டர்கள் தாங்கள் கொடுக்கும் மருந்தினால் மட்டுமே நோயாளிகள் குணமடைகின்றனர் என்றும் நினத்துக் கொள்கின்றனர். மருந்துகளும் சிகிக்சைமுறைகளும் நோயாளிகளை ஆபத்திலிருந்து காப்பற்றுகின்றன என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் நோயாளிகள் குணம் அடைவது இயற்கையின் ஆற்றலால் நடக்கும் ஒன்று என்று நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்..

நம்முடைய அரசு இயந்திரம், அரசுப்பணியில் இருக்கும் டாக்டர்கள், படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவ மனைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது. பணி நேரத்தில் பணியிடங்களில் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்பி இவர்களுடைய பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளிலும் மனவியல் கலை பாடமாக வைக்கப்பட வேண்டும். கருத்துப்பரிமாற்றம், அலோசனை வளங்குதல், மனித உறவுகள்,தன்னிலை உணர்வு முதலியவற்றில் மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும்.

பொதுமக்களும் மணிக்கணக்கில் மருத்துவ மனைகளில் டாக்டருக்காக காத்திருப்பதை ஆட்சேபிக்க முற்பட வேண்டும். டாக்டர்களிடம் மிகவும் பயந்து பவ்வியமாக பேசி அவர்களை அளவுக்கு அதிகமாக மதிப்பதைப் போல் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். டாக்டர்கள் சொல்லுவதை நிதானமாகப் புரிந்து கொள்ள வேண்டும். காப்பற்றவே முடியாத சில நோயாளிகளைக் காப்பற்ற முடியாமல் போனால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெறவேண்டும்.

மருத்துவத்துறையை அரசு, டாக்டர்கள் மற்றும் மக்கள் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால் இந்தத் துறை சார்ந்தவர்கள் அவ்வப்பொழுது தாக்கப்படுதல், அவமதிக்கப்படுதல் போன்றவைகளைச் சந்திக்கும் நிலை வராது.
************
மேற்கொண்டு படிக்க வேண்டிய நூல்கள்
What doctors don't get to study in the medical school : Dr.B.M.Hegde
Paras Medical Publisher, Hyderabad.

You can be healthy : Dr. B.M.Hegde ,
Macmillan India Ltd , Chennai.