Saturday, December 31, 2011

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் நேரடி முதலீடு

இதைப் பற்றி எல்லா மத்திய அரசின் எதிர் கட்சிகளும் பேசியாகிவிட்டது. தொழில் வர்த்தக சங்கங்களும், வணிகர் சங்கங்களும் அபாயக் குரல் கொடுத்தாகி விட்டது. பொது மக்கள் என்னவோ இதையெல்லம் அவர் அவர் நலனுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் பேசுவதாக எண்ணியிருக்கக் கூடும். வழக்கம் போல் பெண்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் கூடும்.

வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தத் துறையில் நுழைந்தால் நாம் உளவியல் ரீதியாக மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகுவோம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள இதைப் பற்றிய என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியாரின் கூற்றை நினைத்துப் பல முறை வியந்திருக்கிறேன். மனிதனைத் தவிர வேறெந்த உயிருக்கும் உணவினைப் பெற இன்னுமொருவரை சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தமும் துர்பாக்கியமும் இல்லை.

ஏற்கனவே இந்த துர்பாக்கியத்தில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கு, நம் நாட்டின் சிறு வியபாரிகளின் ஆதிக்கம் போதாது என்று அயல்நாட்டுப் பெருவியாபாரிகளின் பேராதிக்கம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. என்னதான் ஜனநாயக நாடாக இருந்தாலும் சட்டம் என்று ஒன்று இயற்றப்படுமேயானால் அதற்குக் கட்டுபட்டு நடக்க நாம் தயாராகிவிட வேண்டியதுதான்.

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டுக் கம்பெனிகள் வருவதற்கு எதிர்ப்புகள் இருக்கும் போதிலும் காலப்போக்கில் நிலை மாறிவிடக்கூடும்.

ஏற்கனவே அரிசி, சமையல் எண்ணெய் போன்ற பொருட்களின் விலையில் 50 % விவசாயிகளுக்கும் 50 % வியாபாரிகளுக்கும் பகிர்வாகிறது. அந்நிய பெரு வணிகர்கள் வியாபித்திருக்கும் நாடுகளில் 8 % விவசாயிகளுக்கும் 92 % வணிகத்திற்கும் பகிர்வாகிறது. இந்த நிலை நமக்கு வந்து நாம் எல்லாம் சூப்பர் மார்கெட்டுகளில் எஸ்கலேட்டர்களில் அலைமோதி அதில் பெருமையடையத் தயாராகிவிடவேண்டியதுதான்.

பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்க அருகிலிருக்கும் கடையில் நாம் செலவிடும் நேரம் 2 முதல் 3 நிமிடம் மட்டுமே. சூப்பர் மார்கெட்டில் குறைந்தது 15 நிமிடம் செலவாகும். பெரிய ஷாப்பிங் மாலில் வாங்குவதை நினைத்தால் தலை சுற்றும். ஒரு மாதம் முழுவதிற்கும் சேர்த்து வாங்கி தூக்க முடியாமல் தூக்கிவர வேண்டியிருக்கும். மாலில் நமக்குக் கிடைக்கும் மரியாதையைச் சொல்லிக் கொள்ள முடியது. நமக்கு வேண்டிய பொருட்களைத் தேடித்தேடி சென்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். பில் போடும் இடத்தில் பெரிய வரிசை. அங்கே சிலநேரங்களில் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லையென்றால் பொருட்கள் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை. எந்தப் பொருளைப்பற்றிய எந்தவிபரமும் தெரியாத கடைக்காரப் பையன்களும், பெண்களும். மேற்கொண்டு ஸொடெக்ஸோ பாஸ், கிரிடிட் கார்ட் போன்றவற்றிக்கும் சேர்த்து நாம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலை. ( பணம் எப்படிப் எடுக்கப்படுகிறது என்று பலருக்கும் தெரியவே தெரியாது.) இப்படிப்பட்ட பரிதாபமான அனுபவங்கள் கிடைக்கப் பெருவோம்.

நம் கலாச்சாரத்தில் விற்பனை விலையை எப்படி நிர்ணயம் செய்து வந்தோம் தெரியுமா?

விற்பனை விலை= மூலப்பொருளின் விலை+செய்கூலி+சேதாரம்+ லாபம்.

இன்றைய பெருவணிகர்கள் விலை நிர்ணயிக்கும் விதத்தை,வித்தையைப் பாருங்கள்.

விற்பனை விலை= பொருளை எவ்வளவு அதிகப்படியான விலை கொடுத்து மக்கள் வாங்க தயாராய் இருக்கிறார்கள் என்பது.

எடுத்துக்காட்டாக ஊட்டச் சத்து பானம் 1 கிலோ 300 ரூபாய் விற்கிறதென்றால் அதில் உள்ள மூலப் பொருட்களின் விற்பனை விலை 1 கிலோ 30 ரூபாயைத் தாண்டாது. சரியான விகிதத்தில் கலப்பதற்குக் கூலி 270 ரூபாய். இந்த நிலை மிகச்சுலபமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட ஒன்று.

தங்கத்தைப் பொருத்தவரையில் இந்த ஃபார்முலா எற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது ஆடம்பரத்திற்காக மக்கள் இறைக்கும் பணம் என்று நியாயப்படுத்திவிடலாம். இயற்கை அன்னை இலவசமாக வழங்கிடும் உணவுக்கு இப்படி விலை நிர்ணயம் செய்வது ஏற்புடைய செயலா இல்லையா என்று ஒருபக்கம் பட்டி மன்றங்கள் நடந்தாலும், பெருவணிகர்கள் அவர்கள் ஃபார்முலாவை நடைமுறைப்படுத்திக் காட்டுவார்கள்.

இதுபோல் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கன்னா பின்னாவென்று விலை வைத்து விற்கப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் என்பதால் இங்கே அவர்கள் எதிர்பார்க்கும் விலை ஒரு பொருளுக்கு கிடைக்கவில்லையென்றால் அப்பொருளை ஏற்றுமதிகூட செய்து விடுவர். இப்பொழுது கூட முதல் தர கடல் உணவுகள் சில நமக்குக் கிடைப்பதே இல்லை.

பொதுவாகவே பெருவணிகர்கள் கொள்முதல் விலையை மிகக்குறைவாக நிர்ணயிப்பார்கள். விற்பனை விலையோ மிக அதிகமாக இருக்கும். அப்பொழுது அவர்கள் மிக அதிக லாபம் அடைவார்கள். கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸொடெக்ஸோ பாஸ் முதலியன நம்மை பெருவணிகர்களிடம் மட்டுமே பொருட்கள் வாங்க ஊக்கப்படுத்தும். உற்பத்தியாளர்களோ காத்திருந்து சில்லைரை வியாபாரம் செய்ய விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் பெருவணிகர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுவார்கள். காலப்போக்கில் பொருட்களின் தரம் குறைந்தாலும் நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது.

சமீபத்திய ஆய்வுப்படி தற்சமயம் இந்தியாவில் சுயதொழிலில் ஈடுபட்டிருப்போர் 51 % , மாதச் சம்பளம் பெருபவர்கள் 16 % , தினக்கூலித் தொழிலாளர்கள் 33 % .

இதில் சுயதொழில் செய்பவர்கள் பலர் ஈடுபட்டிருக்கும் துறை சில்லரை வர்த்தகம். தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் அதிக வேலைவாய்ப்பு சில்லரை வர்த்தகம் மூலம் தான்.

பெருவணிகம் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பலருக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர்.

மேலும் பெருவணிகர்கள் பலர் வெளிநட்டைச் சார்ந்த MNC கம்பெனிகளாக இருப்பதால் அதில் வேலை செய்பவர்களுக்கும் அவர்களுடைய கலாச்சாரம் தொற்றிக் கொள்ளும். இதனால் கலாச்சார மாறுதல்கள் நிகழக்கூடும்.

இந்த நிலையில் நம் நாட்டின் பொருளாதாரம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆனால் GDP என்ற பொருளாதாரக் குறியீடு வளர்ந்து விட்டதாக ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வார்கள்.

இந்த மாறுதல்களுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினருக்கு மட்டும் தான் இதில் சிரமங்கள் இருக்கும். வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் அடுத்த தலைமுறையினருக்கு இதுவே நடைமுறையாக மாறியிருக்கும். நம் ஆட்சியாளர்களும் நம்முடைய நாட்டின் பாதுகாப்பை இந்த மாற்றத்திற்குப் பிறகு உறுதிசெய்யும் அளவிற்கு திறைமையானவர்களாக மாறிவிடுவார்கள்.

இதெல்லாம் இதுவரை அயல்நாடுகளில் நடந்த நிகழ்வுகளிலிருந்து யூகிக்க முடிகிறது. ஊகிக்க முடியாத ஒன்று, இந்த மாறுதல்களுக்காக நாம் கொடுக்கவிருக்கும் விலை என்னவென்பது.
சட்டம் இயற்றுவதில் ஆகட்டும், மருத்துவத் துறையாகட்டும், பொறியியல் துறையாகட்டும் நமக்கு வளர்ந்த நாடுகளின் பாதையில் போயே பழக்கமாகி விட்டது. வியாபாரத் துறையிலாவது நம்முடைய பாதை தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவா இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த அவா பலபேருக்கு இருந்தால் உறுதியாக அப்படியொரு புதிய பாதை அமையும்.

Sunday, October 30, 2011

சாத்துக்குடி சாப்பிடுவது ஏன், எதற்கு, எப்படி?

சிறுவயதிலிருந்தே சாத்துக்குடிப் பழங்களைச் சாப்பிடுவது என்பது கொஞ்சம் சிரமமான செயலாகத் தோன்றும். உடம்பு சரியில்லாத நேரங்களில் வலுக்கட்டாயமாக அம்மா சாத்துக்குடிப் பழங்களை உரித்து உள்ளிருக்கும் வெள்ளைத் தோலைக்கூட நீக்கிக்கொடுத்தால் ஏதோ கொஞ்சம் சாப்பிடத்தோன்றும். நலமாக இருக்கும் நாட்களில் சாத்துக்குடி சாப்பிடுவது கிடையாது.

பம்பாயில் வேலை பார்த்த பொழுது என்னுடைய மேலதிகாரியுடன் தாதரைக் கடக்கும் பொழுதெல்லாம், மௌசம்பி ஜூஸ் சாப்பிட வாங்கித்தருவார். கொஞ்சம் உப்பு, மிளகு போட்டு சாப்பிட அமர்க்களமாய் இருக்கும். இருந்தாலும் ஜூஸ் தயாரிக்கும் பொழுது கணிசமாக பழத்தின் உட்பாகம் வீணாகிறது என்று மனம் சங்கடப்படும். வெளித் தோலை உரித்து..... ம்.., நினைத்துப் பார்த்தாலே ஜூஸ் தான் சிறந்தது என்று மனம் நியாப்படுத்திக்கொள்ளும்.

எப்பொழுதாவது வயிறு சரியில்லை என்றால் ஒரு சாத்துக்குடிப் பழம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கஷ்டப் பட்டாவது சாப்பிட்டுவிட்டால் ஜீரணப் பிரச்சனைத் தீர்ந்துவிடும்.

ஒரு முறை இது மாதிரியாகச் சாப்பிடும் பொழுது, உள்ளிருக்கும் வெள்ளைத் தோலையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. அப்படியே சாப்பிட்டுவிட்டேன். என்ன ஆச்சரியம் ! முன்பு என்றும் இல்லாத புது மாதிரியான சுக அனுபவம்.

அன்று முதல் இந்த வெள்ளைத் தோலை வீணாக்குவதே இல்லை. இந்த அரிய கண்டுபிடிப்பை என் மனைவியிடமும் பகிர்ந்து கொண்டேன். அதன் பலனாகச் சாத்துக்குடி சாப்பிட ஒரு சுலப வழியையும் அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். சாத்துக்குடியை எலுமிச்சம் பழம் வெட்டுவது போல் குறுக்காக ஒரு வெட்டு வெட்டி ஒவ்வொரு பகுதியையும் மெதுவாகச் சுவைத்துச் சாப்பிடுவதுதான் அது. இந்த முறையில் சாப்பிட ஆண்களுக்கு மீசை கொஞ்சம் இடஞ்சல் கொடுக்கும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால், சட்டையில் சாத்துக்குடி ரசம் வழிந்துவிடும். மேல்சட்டையும் கால் சட்டையும் பொருத்தமாகப் போடுவதே ஒரு கஷ்டமான வேலை. இதில் கறை படிந்த சட்டையை மட்டும் மாற்றும் சிரமம் பற்றிய நினைப்பு மிகவும் வந்து மிரட்டும். எனவே சுவையான இந்தப் பழம், மருத்துவ குணம் வாய்ந்த இந்தப் பழம் இரவு உணவிற்கு மட்டும் என்று ஆகி விட்டது.

அவ்வப்பொழுது ஜூஸ் சாப்பிட்டு வைட்டமின் C யை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கையின் தொடர் ஓட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் என்னமோ ஒரு ஞானோதயம். பழத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு வெட்டினால் என்ன என்று தோன்றியது. படம் 2 ல் உள்ளபடிக்கு ஒரு மெல்லிய வெட்டு. பத்து சுளைகளும் பளிச்சென்று தெரிந்தன. இரண்டு சுளைகளுக்கு இடையில் வருவது போல் கத்தியால் வெளித்தோலை மட்டும் கீரிவிட்டு மலர்ந்த மலர் போல் உரித்து, படம் 3 ல் உள்ளபடி வெகு சுலபமாக வெளித்தோலை நீக்க முடிகிறது.

தோல் நீக்கிய பழத்தை அன்னாசிப் பழம் போல் ஸ்லைஸ்களாக வெட்டினால் எப்படி இருக்கும் என்று தோன்றவே, படம் 4 ல் உள்ளபடி தொடங்கி 5ல் உள்ளபடி மிகச் சுலபமாக வெட்டி முடித்தேன். கத்தி முனையால் கொட்டைகளை எளிதில் நீக்கவும் முடிகிறது. இப்பொழுது ஒவ்வொரு ஸ்லைஸ்களையும் சாப்பிடுவது சுலபமே. வெளித்தோலையும், கொட்டையையும் தவிர பழத்தின் எந்தப்பகுதியும் வீணாவதில்லை.

குளிர்காலம் ஆரம்பிக்கவிருப்பதால் சாத்துக்குடிப் பழங்கள் சாப்பிட்டு ஜலதோஷம் வராமல் நாம் நம்மைக் காத்துக்கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் பார்ட்டி என்று அடிக்கடி மட்டையாகும் அன்பர்களுக்கு மறுநாள் காலையில் உட்கொள்ள முடியும் ஒரே உணவும், மருந்தும் சாத்துக்குடியே. இதன் ஜூசைக்காட்டிலும் வெள்ளைத்தோலுடன் பழத்தைச் சாப்பிடுவது மட்டுமே உடனடி நிவாரணம் தரவல்லது. வயிற்றுப்புண், மலச்சிக்கல் மற்றும் சிறுநீர்கழிக்கும் பொழுது எரிச்சல் எல்லாவற்றிற்கும் சாத்துக்குடி மருந்தாகிறது.

100 கிராம் எடையுள்ள சாத்துக்குடி 30 காலரி சக்தியைத்தான் கொடுக்கும், ஆனால் ஓரளவிற்கு வயிற்றை நிரப்பிவிடும். எனவே உடல் எடைகுறைக்க காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (50 கிராம் எடையுள்ள இட்லி 150 காலரி சக்தி கொடுக்கும்.)

இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்கள், அவர்கள் அனுபவங்களையும் பின்னூட்டமாகச் சேர்க்கலாம்.

என்ன, சாத்துக்குடி வாங்க கிளம்பியாச்சா?

Wednesday, October 5, 2011

சுடர்மிகும் அறிவு


ஒரு நாள் பேராசிரியர் இன்பராசனிடமிருந்து ஈமெயில் வந்திருப்பதைக் கண்டேன். தமிழகத்தின் தென் பகுதியில் கிராமச்சூழ்நிலையில் அமைந்திருக்கும் கல்லூரியில் இவர் பேராசிரியர். ஒரு முறை இவர்கள் கல்லூரியில் ஒரு நாள் மென் திறன் பயிற்சிப் பட்டறைக்கு என்னுடைய நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்தச் சென்றுள்ளேன். பொதுவாக இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப் பட வேண்டிய ஒன்று. மென்திறன் பயிற்சிகளுக்குப் பாடபுத்தகம், தேர்வு என்ற செயல்முறை ஒத்துவராது என்ற கருத்துடையவன் நான். அடிக்கடி நடக்கும் கலந்தாலோசனைதான் மென் திறன் வளர்க்கும் வழியும் கூட.

இன்னொறு பயிற்சிக்கான அழைப்பாய் இருக்குமோ என்று ஆவலுடன் ஈமெயிலைத் திறந்தேன். மனித உரிமைக் கல்வி பற்றிய ஒரு கருத்தரங்கு நடத்தவிருப்பதாகவும் அதில் 'சுயமுன்னேற்றமும் மனித உரிமையும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட ஒரு அழைப்பாகவும் இருந்தது.

முனைவர் இன்பராசனைத் தொடர்பு கொண்டு கேட்டதில் கட்டுரை வெளியிட ஒவ்வொருவருக்கும் பத்து நிமிட நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார். ஒவ்வொரு கட்டுரை வெளியிட ரூ200/- கட்டணம் செலுத்த வேண்டும் என்றிருந்தது. பொதுவாக பயிற்சி வகுப்புகள் நடத்த நாங்கள் தான் பணம் வாங்குவோம் அல்லது நண்பர்களின் அழைப்பின் பேரில் லயன்ஸ், ரோட்டரி மற்றும் ஒய்ஸ் மென் சங்கங்களில் அரை மணி நேரம் பணம் வாங்காமல் பேசிவிட்டு வருவதும் உண்டு. கட்டுரை வெளியிடும் அனுபவம் தான் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்ததால் அவர்கள் கேட்டபடி ஐந்தரைப் பக்கத்தில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை தயார் செய்து அனுப்பிவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மிகவும் சிரத்தையாக, கல்லூரி நாட்களை நினைவுபடுத்திக் கொண்டு ஒரு மாணவனாக என் எண்ணங்களை மாற்றிக்கொண்டு தேர்வு எழுதச் செல்வது போல் சென்றேன். தேசிய அளவிலான கருத்தரங்கு என்பதால் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய கட்டாயம். பலமுறை நண்பர்கள் ஆங்கிலத்தில் எழுதும் போது கொஞ்சம் சுலப நடையில் எழுதச் சொல்லி என்னிடம் சொல்வார்கள். அதையும் நினைவில் வைத்துக் கொண்டு எழுதியிருந்தேன்.

முதல்வரிசை காலியாக இருந்ததால் சென்று அமர்ந்து கொண்டேன். துவக்க விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் பேசினார். மனித உரிமைக் கல்விக்கு கல்லூரிகள் நேரம் ஒதுக்குவதில்லை. எந்த ஆசிரியரும் அதை வரவேற்பதுமில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர், மனித உரிமைக் கல்விக்காக மானியம் 1994 ல் இருந்து ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அதை இன்று வரை யாரும் சரிவரப் பயன் படுத்தவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார்.

அதற்குப் பின் பேசிய அன்பர், மனித உரிமைக் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வருபவர். ஒரு சிறந்த வழக்கறிஞர். மனித உரிமை மீறல் வழக்குகள் பலவற்றை நடத்திய அனுபவம் வாய்ந்தவர். மனித உரிமைகளைப் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ள எல்லா உரிமைகளையும் இவர் நான்கு தலைப்புகளின் கீழ் வரிசைப்படித்தியது என்னை மிகவும் கவர்ந்தது.

வாழ்வுரிமை, சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை மற்றும் சுயமரியாதை உரிமை என்று நான்கு தலைப்புகளில் எல்லாவற்றையும் அடக்கிவிடலாம்.

அதிகார வர்கமும், அரசியல்வாதிகளும் மற்றும் சில ஆசிரியர்கள் கூட மனித உரிமைகளைப் பொருட்படுத்தாமல் உரிமை மீறுவது குறித்து பல எடுத்துக் காட்டுகள் கொடுத்து விளக்கமளித்தார். நமது கல்வித்திட்டதில் மனித உரிமைகள் பற்றிய கல்வி அறவே இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். ஒரு சிறந்த உரையைக் கேட்ட திருப்தி. ஒரு வாரம் முன்னமே நான் எழுதியனுப்பியிருந்த கட்டுரையில் இந்தக் கருத்தை நானும் வலியுறுத்தி எழுதியிருந்தேன் என்பது எனக்குப் பெருமையாகவும் இருந்தது.

மதிய இடைவேளைக்குப் பிறகு கருத்தரங்குக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். எனக்கு முதலாவதாக வாய்ப்புக் கிடைத்தது. எனக்கென்னமோ நான் பேசும் ஆங்கிலம் அங்கு கூடியிருந்த மாணவர்களுக்குப் புரியப்போவது இல்லை என்ற எண்ணம் மேலோங்கியே இருந்தது. எனவே மிகவும் மெதுவாக பேசி முடித்து இறங்கிவந்தேன். பெரிய விஷயங்கள் அடங்கிய கட்டுரையைப் பற்றி பேச 10 நிமிடம் போதவில்லை என்ற அதிருப்தி.

அடுத்து பேசிய மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி தெளிவில்லாமல் பேசியது, ஆங்கிலத்தில் பேச படாத பாடு பட்டது பரிதாபமாக இருந்தது. நல்ல வேளை என்னுடைய உரையை நான் முன்னமே முடித்திருந்தேன். இல்லையென்றால் ஒன்றுமே பேசாமல் பவர்பாயின்ட் திரையில் போட்டுவைத்த தலைப்புகளை மட்டும் வாசித்துவிட்டு வந்திருப்பேன்.

ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் என்றால் ஓரளவாவது ஆங்கிலம் பேச, படிக்க முடிய வேண்டாமா? ஒரு வாக்கியத்தைக்கூட சரியாக வாசிக்கக் முடியாத மாணவர்களைக் காண முடிந்தது. இந்த லட்சணத்தில் இந்த மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை மதிப்பிடும் பணி எவ்வளவு கொடுமையாக இருக்கும்? மாணவர்கள் கல்வியை ஒழுங்காகப் படிக்காமல் இருப்பது கூட அவர்கள் சுதந்திர உரிமையோ? ஈடு பாடில்லாமல் படித்து வாங்கும் பட்டத்தைக் கூட சமூகம் அங்கீகரிப்பதால் இந்த நிலையோ? வேலைக்குப் போக ஏற்ற வயது வரை கூட்டத்தில் கோவிந்தா போடுவது போல செய்யப்படும் ஒரு சடங்குதான் இன்றைய கல்வியோ? கருத்துப் பரிமாற்றம் செய்யும் திறன் கூட அரைகுறையாக இருக்கிறதே! நடந்து கொள்ளும் முறை பற்றியோ, சுய முன்னேற்றம் பற்றியோ, மனித உரிமைகள் பற்றியோ கல்லூரிகளில் பாடங்கள் நான் படித்த காலம்தொட்டு இன்றுவரை இல்லையே! இப்படிப் பல கனத்த சிந்தனைகளுடன் வீடு திரும்பினேன்.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். ----என்பார் திருவள்ளுவர்.

(உலகத்தோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாதவர், பலவற்றை
கற்றவராயினும் அறிவில்லாதவரே)

அவர் கூற்றுப்படி கல்லூரிகள் முதலில் பயிற்றுமொழியில் திறனையும் மனித உரிமைகளையும், சுய முன்னேற்றக் கல்வியையும் கற்பதற்கான சூழலைத் தான் உருவாக்கியிருக்க வேண்டும்.

'எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்' என்று பாரதியார் கூறுவது சுடர் மிகும் அறிவு என்பது பிறப்பிலே அமையப் பெருவதோ? என்ற ஐயப்பாட்டையும் எழுப்புகிறது.

இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி நாம் மிகவும் பெருமை பட்டுக் கொள்கின்றோம். 'குடும்ப அமைப்பு' என்பதில், சமூதாய கண்ணோட்டத்தில் மட்டும் நம் கலாச்சாரம் சிறப்புடையதே. ஆனால் மனித உரிமைகளைப் பொருத்தமட்டில் நாம் இன்னும் நிறைய முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. பல குடும்பங்களில் ஆணாதிக்கமும் இன்றைய காலகட்டத்தில் பெண்ணாதிக்கமும் கூட தலை விரித்தாடுகிறது. பெண்களின் ஆதிக்கப் போக்கால் பல பெரியவர்கள் பராமரிப்பின்றி அவதிப் படுகிறார்கள்.

பதவிகள், அதிகாரங்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் மக்களின் அறியாமை முதலியவற்றைப் பயன் படுத்திப் பொருள் ஈட்டுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நல்ல சாலைகள் அமைக்காதாது, அடிப்படை வசதிகளை செய்து தராதது, குப்பைக் கூழங்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவது எல்லாமே அதிகார வர்கத்தின் மனித உரிமை மீறல்களே. இந்த மாதிரியான மனித உரிமை மீறல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பே நம்முடைய இன்றையக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் மாற வேண்டும்.

மனித உறவுகளும், உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மரியாதை,சுத்தம், தரம், நேர்மை, ஒழுங்கு, நியாயம், அர்ப்பணிப்பு, துரித செயல் பாடு என்பவைகள்,செயல்களை இயக்கும் அடிப்படை காரணிகளாக வேண்டும்.

இல்லையென்றால் பாரதிமுதல் இன்றுவரை சுடர்மிகும் அறிவுடன் படைக்கப் பட்டதாக நம்பும் அத்துனை பேரும் கடவுளிடம் இந்த மாநிலம் பயனுர வாழ்வதற்கு வல்லமை வேண்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். பலர் வெறுத்துப் போய் இந்தியாவைவிட்டு ஓடிப்போவதைத் தடுக்க முடியாமல் வெட்கமில்லாமல் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.


Monday, August 29, 2011

ஆங்கிலம் பேச நான் ரெடி, நீங்க ரெடியா ?



மம்மி, மம்மி என்று பக்கத்து வீட்டுக் குழந்தை அதன் அம்மாவை அழைக்கும் குரல் கேட்டது. இது ஒன்றும் புதிதல்ல. பல வருட காலமாய் இந்தக் குழந்தை தன் அம்மாவை மம்மி என்று அழைப்பதும் அப்பாவை டாடி என்று அழைப்பதும் சகஜமாய் நடந்து வரும் ஒன்றுதான். நான் கூட என் நண்பர் ஒருவர் இதைக் குறையாகக் கூறியவுடன், மம்மி டாடி என்ற சொல்லைத் தமிழ்மொழி ஏற்றுக்கொண்டு விட்டது. இப்பொழுதெல்லாம் 'அம்மையப்பர் கடை' என்ற பெயரைக் கூட 'மம்மி டாடி ஸ்டோர்ஸ்' என்று தமிழில் எழுதும் முறை பெருமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது
என்று சற்று நகைச்சுவையாகச் சொல்லி தூயத் தமிழுணர்வை மழுங்கடித்ததும் உண்டு.

லட்சக்கணக்கில் செலவு செய்து ஆங்கில வழிக்கல்வி கற்றால் தான் மேற்படிப்பிற்கு ஏதுவாய் இருக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. படித்தவர்கள் என்றால் ஆங்கிலம் பேசியே ஆக வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருப்பதால், ஸ்போக்கன் இங்க்லீஷ் என்ற ஒரு படிப்பும் பிரபல்யமாகி விட்டது.

ஒரு முறை தமிழ் வளர்த்த மதுரையில் ஒருவர் அரைகுறை ஆங்கிலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எப்படிப் போவது என்று கேட்டார். ஒரு வேளை என் தோற்றம் அவருக்கு தமிழ் தெரியாதவரைப் போல் தோன்றியிருக்க வேண்டும், எனவே தான் சிரமப்பட்டு ஆங்கிலத்தில் கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தெளிவான தமிழிலேயே பதில் சொல்லிவிட்டேன். தாங்க் யூ, என்று என்னிடம் சொல்லிவிட்டு, டீசன்டா இருக்கிறவங்களுக்குக் கூட இங்கிலீஷ் பேச வரவில்லை. இதுவே சென்னையாக இருந்தால் இங்கிலீஷ்லே பதில் சொல்லியிருப்பாங்க என்று தன் சக நண்பரிடம் சொல்லிக்கொண்டு போனார்.

நான் ஒருக்கால் இவருக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன். எனக்கு ஒரு திரைப்படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. பெரியவர் ஒருவரின் வீட்டிற்கு மருமகளின் தம்பி வருகிறான். பெரியவரின் மனைவி பெரியவரிடம் அவனிடம் இங்கிலீஷ் பேசச் சொல்கிறார். உடனே தனக்குத் தெரிந்த அளவில் ' வாட் இஸ் யுவர் நேம்?' என்று வினவ, பையன் ' ஐ அம் சக்கரவர்த்தி, மை ஃபிரண்ட்ஸ் கால் மீ சக்கு' என்று பதில் சொல்ல பெரியவர் பேந்த பேந்த விளிப்பதாக காட்சி அமைந்திருக்கும். அரைகுறை ஆங்கிலம் தெரிந்த பெரியவருக்கு " மை நேம் இஸ் சக்கரவர்த்தி' என்று சொன்னால் மட்டுமே புரிந்திருக்கும்.

இனி நம் அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலம் படுத்தும் பாடு என்ன என்று பார்ப்போம். குழந்தைகளின் ஸ்கூல் டைரி ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அவர்களுடைய மிஸ் என்று அழைக்கபடும் டீச்சர்கள் நம்மிடத்தில் கூட ஆங்கிலத்தில் பேசி பந்தா காட்டுகிறார்கள்.

வங்கியில் மேலும் கீழும், குறுக்கும், நெடுக்கும் நிறையக் கையெழுத்துப் போட வேண்டிய பல பத்திரங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. வங்கியின் டிராஃப்ட், செக் மற்றும் இன்டெர்நெட் பரிவர்த்தனைகள் எல்லாமே ஆங்கிலத்தில் தான். காப்பீடு நிறுவனங்களின் பொடிப் பொடி எழுத்துக்களில் கொடுக்கப்படும் ஆவணங்கள் அத்தனையும் நம் ஆங்கிலப் புலமைக்குச் சவாலாகவே இருந்து வருகின்றன.

தமிழகத்தில் ஹிந்தியைப் புறக்கணித்ததால், வேறு மாநிலத்தவருடன் பேச வேண்டியவைகளை ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கிறது.இன்றைய கால கட்டத்தில் ஜன் லோக் பால் பில் பற்றி புரிந்து கொள்ள தமிழனுக்கு ஆங்கிலம் ஒன்றுதான் ஒரே வழி. ஹிந்தித் திணிப்பிலிருந்து நாம் தப்பித்துவிட்டாலும் ஆங்கிலத் திணிப்பிலிலிருந்து தப்பிக்க வழியில்லை. சன்ரைஸ், ப்ரூ காப்பி கூட ஆங்கில மணம் கலந்து தான் கிடைக்கிறது.

ஒரு மொழியை நாம் எப்படி கற்றுக் கொள்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழை எப்படிக் கற்றுக் கொண்டோம். அம்மாவின் முகம் பார்த்துச் சிரித்தவுடன், அம்மா என்ன தொல்காப்பியமா கற்றுக் கொடுத்தார்? அம்மா,அப்பா, அண்ணா, அக்கா என்று சிறு சிறு வார்த்தைகள் சொல்லிக்கொடுத்து, நாம் பேசிய மழலையைக் குழலைக் காட்டிலும், யாழைக் காட்டிலுமல்லவா ரசித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சு தமிழ் பேசிய நாம் இலக்கணப் பிழையில்லாமல் தானே பேசினோம்.

சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று பேசும் தமிழைப்
பழகிவிட்டோமே. பரவை முனியம்மா, மற்றும் கொல்லங்குடி கருப்பாயிகூட முனைவர் சாலமன் பாப்பையாவுக்கே இணையாகத் தமிழ் பேசவில்லையா.

ஆங்கிலம் பேசத்தெரியாமல் எப்படி ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று விடுகின்றோம்? ஒரு மொழியை எப்படிப் பேசுவது என்று நாம் சிந்தப்பதே இல்லை. முப்பது நாட்களில் ஆங்கிலம் பேச கற்றுக் கொள்வோமானால் ' வாட் இஸ் யுவர் நேம்?' என்ற வரையில் தான் ஆங்கிலம் பேச வரும்.

தாய்மொழி அல்லாது வேறெந்த மொழியிலும் திறமையை வளர்த்துக் கொள்ள நான்கு கட்ட நடவடிக்கைத் தேவைபடுகிறது.

முதலாவதாகக் கேட்டல், இரண்டாவதாகப் பேசுதல், அடுத்ததாகப் படித்தல் முடிவாக எழுதுதல். ஒவ்வொரு மொழியையும் பிறர் பேசக்கேட்டு அதன் அர்த்தம் புரிந்து கொள்ளப் பாருங்கள். பிறகு அவரிடமே பேசிப்பழகுங்கள். பிறகு எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தான் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ளுங்கள்.

அதன் பின் எவ்வளவுக் கதைப் புத்தகங்களைப் படிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு படியுங்கள். அந்த மொழியில் பேசப்படும் பேச்சுக்களைக் கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நண்பருடனோ தெரிந்தவர்களுடனோ கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பழகுங்கள். சங்கோஜப் பட வேண்டாம். அப்புறம் தான் இலக்கணத்தைக் கற்க முடியும். இலக்கணம் கற்பது என்பது ஒரு மொழியின் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ளவேயன்றி மொழியைப் பேச அல்ல.

இப்படித்தான் நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொண்ட மொழியில் தொடர்ந்து பேசவும், படிக்கவும் எழுதவும் வேண்டும். இல்லையென்றால் எதை மட்டும் செய்கிறோமோ, உதாரணத்திற்கு பேசுவதை மட்டும் செய்தால் அதை மட்டும் தான் தொடர்ந்து செய்ய முடிகிறது.

ஆங்கிலத்தில் திறமையை நிலைநிறுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் இன்றும் எனக்கு ஆங்கிலக் கதைகளைப் படிக்க வேண்டியிருக்கிறது. வலைப்பூவில் எழுத வேண்டியிருக்கிறது. சில வலைப் பூக்களில் சென்று பின்னூட்டம் இட வேண்டியிருக்கிறது. அவ்வப்பொழுது NDTV மற்றும் CNN பார்க்க வேண்டியுள்ளது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

என்ன, ஆங்கிலம் பேச நான் ரெடி. நீங்க ரெடியா?

Wednesday, August 24, 2011

கோகுலாஷ்டமி

கோவிலுக்குச் செல்வது, திருவிழாவிற்குப் போவது போன்ற செயல்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. கொஞ்சம் அமைதியை விரும்பும் ரகமாக இருப்பதால் ஆரவாரம் உள்ள இடமாகத் திருவிழாக்களை எடுத்துக்கொள்வேன். இறைவனை உருவமில்லா எங்கும் நிறைந்திருப்பவராய் மனதில் நினைத்துக் கொள்ள ஏனோ எனக்குப் பிடிக்கும். எனவே புராணங்களை அவ்வளவாகப் படித்ததில்லை.

ஆன்மீகவாதிகள் பலரும் இறைவனை எங்கும் நிறைந்தவராகவும், நமக்குள்ளே இருப்பவராகவும் உணரச் சொல்வதை எனக்குச் சாதகமாகச் சொல்வதாக எடுத்துக் கொள்வேன். மதத்தின் பெயரால் ஏற்பட்டக் கலவரங்கள், உயிர்பலிகள் அனைத்திற்கும் இறைவனைப்பற்றிய பல்வேறு நம்பிக்கைகளே காரணம் என்று முடிவு கட்டியும் விட்டேன்.

இருந்தாலும் உருவ வழிபாட்டில் சில சௌகரியங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை இருப்பதால் கோவில்களுக்கு சென்று உருவ வழிபாட்டு முறையையும் அதில் மக்களுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியையும் கூர்ந்து கவனிப்பதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் சர்ச், மசூதி, புத்த மடங்கள் மற்றும் குருத்துவார்களுக்கும் போய் வந்த அனுபவங்களும் உண்டு.

சிறு வயதிலே முதல் முதலாக பைபிளைப் படிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. இராமாயணம் மற்றும் மஹாபாரதக் கதைகள் பள்ளிப்பாடங்களிலேயே வந்து விட்டபடியாலும், திரைப்படங்களில் வந்த படியாலும் ஒரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் பகவத் கீதை என்ன என்பது தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. அர்ஜுனனுக்கு, இறைவன் ஸ்ரீகிருஷ்ணராகப் பிறவி எடுத்துச் செய்யும் போதனை என்று மட்டும் அரசல் புரசலாகத் தெரிந்திருந்தது.

இஸ்கான் என்ற கிருஷ்ணபக்தி இயக்கம் ஒன்று இருப்பது செய்திகள் வாயிலாகத் தெரிய வந்தது. ஒரு முறை பெங்களூர் சென்ற பொழுது இஸ்கான் இயக்கத்தால் கட்டப்பட்ட ஒரு பெரிய கிருஷ்ணர்கோவில் இருப்பதும் அறியலாகிற்று. எனினும் போய் வர சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஒரு விடுமுறை நாள் காலைப் பத்து மணியளவில், வித்தியாசமான உடையுடனும், நெற்றியில் சந்தன நாமத்துடனும் ஒரு இளைஞன் இஸ்கானிலிருந்து வருவதாகக் கூறி, பகவத் கீதைப் புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தினான். ஹிந்துவாகப் பிறந்த என்னிடம் ஹிந்துக்களின் வேதமாகிய பகவத் கீதை இல்லையென்பது ஞாபகம் வந்தது. உடனே வாங்கி வைத்தேன். முதல் அத்தியாயத்தை படித்துப் பார்த்தேன். குருச்சேத்திரப் போர்களம் பற்றிய விளக்கம் இருந்தது. இதுதான் எனக்குத் தெரியுமே என்று மூடி வைத்துவிட்டேன். பின் அத்தியாயங்களில் ஒரு சில பக்கங்களைப் படிக்க முயற்சி செய்தேன். ஸ்ரீகிருஷ்ணரே எல்லாம் வல்லவர். அவரைச் சரணடைய வேண்டும் என்ற ரீதியில் நீண்ட விளக்கங்கள். இஸ்கானில் இணையச் செய்ய, மேற்கொள்ளப் பட்ட முயற்சிபோல் தென் பட்டது. ஒரு பதம் மூன்று வரிகள் இருந்தால் விளக்கம் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்தது. என் மனதிற்கு அந்த விளக்கங்கள் சரியாகப் படவில்லை. எனவே புத்தகத்தை அலமாரியில் வைத்து விட்டேன். இது ஒரு மத நூல் என்றும் முடிவுகட்டிவிட்டேன். இறைவனை ஸ்ரீகிருஷ்ணர் வடிவில் வழிபட நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எழுதப் பட்ட நூல் என்று நினத்துக் கொண்டேன். அப்புறம் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

மென்திறன் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவது எனக்கு விருப்பமான ஒன்று. ஒரு முறை பயிற்சி வகுப்புக்களுக்கு என்னை ஆயத்தப்படுத்திகொண்டிருந்த வேளை. மனித குணங்களைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். தூங்கப் போகலாம் என்று புத்தகங்களை மூடிவைத்தேன். தற்செயலாக கீழே பார்த்தேன். பொட்டலம் மடித்த செய்தித்தாள் துண்டு என் கால்களுக்கு அடியில் கிடந்தது. அதில்' GEETHA SPEAKS ON PERSONALITY' ( மனித குணத்தைபற்றி கீதையில் விளக்கம்) என்ற எழுத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதில் கீதையின் பதினான்காவது அத்தியாயம் பற்றி சிறு குறிப்பு இருந்தது. இது உண்மையா என்று பார்க்க ஓடிச் சென்று பகவத் கீதைப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். பதங்களின் மொழி பெயர்ப்பாகக் கொடுக்கப்பட்டிருந்த உரை மனித குணத்தைப் பற்றிய விளக்கமாக இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். ஹிந்தி மொழியை முறைப்படிக் கற்றிருந்த படியால் சமஸ்கிருத பதங்களை வாசிக்க என்னால் முடியும். ஹிந்தியின் மூல மொழி சமஸ்கிருதம் என்பதால் மொழிபெயர்ப்பை மிகச் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கலானேன். உரை ஆசிரியர் எழுதியதைப் படிப்பதில்லை. மொழிபெயர்ப்பைப் படிப்பது, இதைப்பற்றி சிந்திப்பது என்ற முறையில் ஓரளவு புரிந்து கொண்டேன்.

இது இப்படியிருக்க, என் மூதாதையர்கள் கட்டி வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண பஜனை மடத்திற்கு நிர்வாக உருப்பினராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா மிகக் கோலகலமாக தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு விழாவில் கீதைப் பற்றிய ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் நானே பேச முடிவெடுத்து விழாக் குழுவினரிடம் ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் புதைந்து கிடக்கும் ஞானத்தைப் பற்றி ஒரு மணிநேரம் விளக்கமளித்து மகிழ்ந்தேன். உரை முடிந்ததும் என்னிடம் கேள்விகள் கேட்கச் சொன்னேன். நான் மிகவும் ரசித்த கேள்வியும் அதற்கான என் பதிலும் இதோ உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி : இத்தனை தகவல்களையும் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்முனையில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? எத்தனையோ நாட்கள் இவ்விருவரும் நல்ல நண்பர்களாக சேர்ந்து இருந்தவர்கள் தானே?

பதில்: மற்ற எல்லா நேரங்களிலும் அர்ஜுனன் மனம் கலங்காத வீரனாகவும், தருமருக்குக் கட்டுப்பட்டு மன நிறைவோடும் கலக்கமில்லாமலும் இருக்கிறார். ஆனால் போர்களத்தில் தான் மனம் கலங்கி நிற்கிறார். ஏற்கனவே அறிந்த, உள்வாங்கிக் கொண்ட பல கருத்துக்களும், மதிப்புக்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரத்தில் மாயையை விடுத்து உண்மையைப் புரிந்துக் கொள்ள அர்ஜுனனின் மனம் அந்த சமயம் தான் பண்படுகிறது. இதற்கு அர்ஜுனனின் கூரிய அறிவு தான் காரணம். உண்மையை உணர்ந்தே தீர வேண்டிய நிர்பந்தமும் போர்களத்தில் தான் ஏற்படுகிறது. அர்ஜுனனைத் தவிர வேறு யாருக்கும் கீதையைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இல்லை.

பகவத் கீதை தான் ஸ்ரீகிருஷ்ணர் என்று எனக்கு எப்பொழுதும் படும். அதன் பதங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் மேல் உள்ள மதிப்பு மிகவும் உயர்ந்து நிற்கும்

அறத்திற்கு எங்கெல்லாம் எவ்வப்பொழுதெல்லாம் கேடுவிளைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரதகுலத்தோனே, அப்பொழுதெல்லாம் நான் சுயமாகத்தோன்றுகின்றேன்"

பகவத் கீதை- அத்தியாயம் 4,பதம் 7

அதர்மம் ஓங்கும் போது கீதையுருவில் இருக்கும் விதையானது, அதர்மத்தை அழிக்கும் சர்வ வல்லமைப் படைத்த விருட்சமாக உருமாறும் என்பது தான் இந்த பதத்தின் பொருள் என்று எனக்குப் படுகிறது.

தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் ஆடம்பரமான ஒன்றாக இருந்து வருகிறது. ஸ்ரீகிருஷ்ணர் பாலகிருஷ்ணனாக இருந்த பொழுது நடத்திய லீலைகள் என்றும் நினைவு கூர்வதற்கு சுவையானதாக இருக்கிறது. குறும்பு செய்யும் பிள்ளைகளை எல்லோருக்கும் பிடிக்கும். எனவே தானோ தத்தம் குழந்தைகளை பாலகிருஷ்ணனாக பார்க்க நிறைய பேர் விரும்புகின்றனர் போலும்.

ஸ்ரீகிருஷ்ணர் கோவில்களில் அலங்காரமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக இருக்கும். அவர் வாழ்வில் பல பாடல்கள் எழுத நிறைய நிகழ்வுகள் இருப்பதால் இசைக்கும் குறைவில்லை. காதல் பாடல்கள் கூட இதில் அடங்கும். அவர் ஒரு சிறந்த போர் வீரனாக, சிறந்த காதலனாக, சிறந்த அரசனாக,சிறந்த நண்பனாக, சிறந்த அலோசகராக வாழ்ந்தவர். எனவே எல்லா வயதினரையும் கவரும் நிகழ்சிகள் எளிதாக அமைந்துவிடும். இறைவனை ஸ்ரீகிருஷ்ணர் உருவில் வணங்குவது மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

இருந்தாலும் அவருடைய கீதையை மூடிவைத்துப் பூஜை செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதங்களுக்கு அப்பாற்பட்ட அதன் உண்மைகள் எல்லோருக்கும் போய் சேரவேண்டும். இல்லாவிட்டால்
"எது நடந்ததோ நன்றாக நடந்தது" என்று தொடங்கும் அபத்தங்கள் கீதை என்ற பெயரால் வலம் வந்து கீதையின் பேரொளியை மறைக்கும் கருமேகமாகி நிற்கும்.

எதிர்பார்ப்பில் கவனத்தைச் செலுத்தாமல் ஒருவன் தன் கடமைகளில் ஈடுபட்டு செயலாற்றும் பொழுது மிக உயர்ந்த நிலையை அடைகிறான்" என்று பொருள் படுவது தான் கீதையின் மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகத்தின் 19 வது பதம்.

இந்த ஒன்றை செயல் படுத்திப் பாருங்கள். உங்கள் உன்னதம், உங்களின் மன அமைதி உங்கள் செயல்களின் பலன்கள் உங்களையே ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு சிறப்புடையதாக இருக்கும்.


Saturday, August 13, 2011

பெரியவர்களின் ஆடுகளம்

இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு ஒரு தொலைபேசி இணைப்பு கிடைத்தது. அப்பொழுது தான் STD என்ற தொலைதூர அழைப்புக்கள் சாத்தியப்பட்டிருந்த காலம். அதற்கு முன் தொலைபேசி எக்ஸ்சேஞ்சை அழைத்து வேறு ஊரில் இருப்பவரின் தொலைபேசி எண்ணையும் ஊர்ப் பெயரையும் சொல்லிக் காத்திருந்து, இணைப்புக் கிடத்ததும் அக்கம் பக்கமுள்ள அனைத்து வீட்டாருக்கும் கேட்கும்படி கத்தி கத்தி இரகசியத் தகவல்கள் கூட சொல்ல வேண்டியதிருக்கும்.
கோடிவீட்டு கோவிந்தனுக்கு ஒரு அவசர அழைப்பு, மாடிவீட்டு மாதவனுக்கும் ஒரு அழைப்பு என்று வரும் பொழுது சலைக்காமல் ஓடி ஓடி அவர்களை அழைத்துவந்து பேசவைத்த காலம் அது. ஒரு பெரிய தவளையைப் போல் இருக்கும் அந்த ஃபோன். அது கூட தொலைபேசி இலாகாவிற்கு சொந்தம். மாதாமாதம் 200 ரூபாய்க்கு பில் வரும். அதுவே ஆடம்பரச் செலவு தான். ஆனால் தொழிலுக்குத் தேவைப்பட்டதால் அதிகச் சுமையாகப் படவில்லை. வேறு எந்தச் செலவும் கிடையாது.

இன்றைக்கு ஒரு வீட்டில் எத்தனைப் பேர் இருக்கிறார்களோ அத்தனை செல் ஃபோன்கள். பாட்டிகள் கூட மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறார்கள். படுக்கையில் படுக்கும் போதுகூட கூடவே வைத்துக்கொள்ள வேண்டிய செல்ல அந்தஸ்த்து. SMS என்ற ஓர் ரகசிய தகவல் பரிமாற்றம். அதில் ஃபார்வேர்ட் என்று சொல்லப்படும் ரூம் போட்டு யோசித்த தத்துவ தகவல் பரிமாற்றம். அப்பப்பா! வியத்தகு வளர்ச்சி. என்ன, அப்பப்ப, லம்பா ஒரு தொகை ஃ போன் வாங்க செலவு ஆவதும், கேமரா, மியூசிக் பிளேயர் போன்ற பந்தா விஷயங்களால் மற்றவர்களை உசுப்பேத்துவது கொஞ்சம் அதிகமாகவே நடந்தேறி வருகின்றன. வாயில் நுழையாத நீலப்பல் அமைப்புகளுக்கும் மதிமயங்கி மக்கள் கொடுக்கும் பணம் பல்லாயிரம்.

குழந்தைகளை செல் ஃபோன் கதிர்கள் மிகவும் பாதிப்பதாக காக்காயாய் கத்தி ஓய்ந்த இமெயில் ஃபார்வேர்டுகள். பிஞ்சுக் குழைந்தைகள் இதில் பேசும் பொழுது தடுக்கவோ பார்க்கவோ என்று ஊஞ்சலாடும் மனம்.
ஒரு லட்ச ரூபாய் செலவில் ஒரு குளிர் சாதனப் பெட்டி பார்த்தேன். இதை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வார்கள் .மிஞ்சிப் போனால் 4 பால் பாக்கட், ஒரு சட்டி இட்லி மாவு, அரை தர்பூசணி, சத்தே இல்லாத கலர் பான பாட்டில்கள், அதற்கு மேல் யோசித்தால் முந்தைய நாள் வத்தக்குழம்பு, நேற்று வைத்த தக்காளிச் சட்னி, வாடிவதங்கிப் போன காய்கறிகள் இதெல்லாம் பற்றிதான் ஞாபகம் வருகிறது.

இந்தியச் சமையலுக்குக் கொஞ்சம் கூட வசதிப்படாத ஒன்று மைக்ரோ வேவ் வோவன் என்ற கதிரியக்கப் பெட்டி. உணவுப் பொருள்களை சாதாரண அடுப்பு, வெளிப்பரப்பிலிருந்து உள்ளுக்குள் வெப்பத்தைச் செலுத்தினால், இது உள்ளிருந்து வெளிப்பரப்புக்கு வெப்பத்தைச் செலுத்துமாம். இதில் சமைத்த உணவைச் சாப்பிட்டால் என்னவாகும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. குளிர்சாதப் பெட்டியிலிருந்து எடுத்து 5 நிமிடத்தில் பதமாக சூடு பண்ண முடிகின்றபடியால் அம்மணிக்களின் ஒட்டு மொத்த ஓட்டு மைக்ரோ வேவ் வோவன்களுக்கே.

என்னைக் கேட்டால் வாஷிங் மெஷின் தான் தலைசிறந்த சாதனம் என்பேன். ஏதாவது சந்தர்ப்பத்தில் துணி துவைக்க வேண்டும் என்றால் இதுதான் கைகொடுக்கும். மற்ற எல்லா சாதனங்களையும் கொஞ்சம் நக்கல் பார்வை பார்த்தாலும் இதை மரியாதையாக பார்த்தே பழகிவிட்டது. கண்மாய்க்கரையில் வீடு அமைந்து விட்டதால் தண்ணீர் கஷ்டம் இல்லை.

அம்மிக்களையும் உரல்களையும் உலகத்தைவிட்டே விரட்டிவிட்ட பெருமை மிக்சிக்களையே சாரும். இதில் பெரிய வகை, ஃபுட் ப்ராசசர் என்ற பெயரில் சமயலறையை அலங்கரிக்கும். நேரத்தை மிச்சம் பண்ணும். சுவையையும் குறைத்து விடும். இந்த அவசர யுகத்தில் உங்களுக்குச் சட்னி கிடைப்பதே பெருசு என்று நீங்கள் சொல்வது கேட்கத்தான் செய்கிறது. ஆனாலும் அம்மியையும் உரலையும் நாக்கு மறப்பேனா என்கிறது.
விளக்கு வைக்கும் நேரம் பார்த்து நடு வீட்டில் உட்கார்ந்து கொண்டு அல்லது ஹால் சுவரில் தொங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்கும் துணிவுள்ள சாதனம் தொலைக்காட்சி. கொடூரமான சண்டைக் காட்சிகள், மசாலா நடனங்கள் என்று கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மக்களின் மனம் கவர் சாதனம். மூத்தக் குடிமக்களின் ஒரே சொர்கம் என்ற அந்தஸ்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இணையில்லா சாதனம். கணிசமான தொகையை விழுங்கிக்கொண்டிருக்கும் இடியட் பாக்ஸ். பிரபல தொலைக்காட்சிக் கம்பெனியின் வருடாந்திர கணக்கு கையில் கிடைத்தது. அப்பா! இத்தனைக் கோடி வருமானமா! உண்மையிலே கூரையைப் பிய்த்து கொண்டுதான் கொட்டுகிறது.
இப்படியே நாம் செலவழித்து அனுபவிக்க பல்வேறு சாதனங்கள் பெருகிவிட்டன. சிறுவர்களுக்கு விளையாட பொம்மைகள் போல் இந்தச் சாதனங்கள் பெரியவர்கள் விளையாட்டைத் தொடர வழிவகுக்கின்றன. பாசப் பரிமாற்றங்களுக்கும், நேசப்பரிமாற்றங்களுக்கும், காதல் சடுகுடுக்களுக்கும் ஏற்ற பரிசுகளாயும் இடம் பிடித்து விட்டன. பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் விளையாட்டுப் பொருட்களின் குணாதிசயங்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ள படியால் விளையாட்டில் மனம் கொள்ளை போகின்றது.

குழைந்தைகளுக்கு பொம்மை வாங்கும் பொழுது எந்த அளவுகோல் கொண்டு செலவை நிர்ணயிப்போமோ அதேபோல் இந்தப் பொருட்களுக்கும் செலவு செய்வோமானால் மனக் கலக்கமில்லை. ஒரேயடியாக பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்று ஆசையை வளர்த்துக்கொண்டு அதிகம் செலவு செய்து சேமிப்பை இழக்காமல் இருப்பது நல்லது. பொருட்களின் பயன்பாட்டை முன் நிறுத்தி ஆராய்ந்து செலவு செய்வது சிறப்பு.

Saturday, August 6, 2011

பட்டுப் புடவைப் பற்றிய சந்தேகம்.

இத்தனை வருடம் ஆகியும் பட்டுப்புடவை பற்றி சந்தேகம் தீர்ந்த பாடில்லை. ஏம் மாமி இவ்வளவு பணம் போட்டு பட்டுப்புடவை எடுத்துக்கறேள் என்று பக்கத்தாத்து மாமியைக் கேட்டால், போடா நோக்கு சொன்னா புரியாதுன்னு அவா பாணியிலே அழுத்தம் திருத்தமா சொல்லிடரா. காயத்ரி அக்காட்ட கேட்டா, கண்டதப் பத்தியும் அராய்ச்சி பண்ணி நேரத்த வீணடிக்காதேடா... அப்படின்னு ஒரு பதில். மாமாட்டே கேட்டா ஒரு முறைப்பு.

எங்கம்மாகிட்ட கேட்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஒன்றொ ரெண்டோ பட்டுப்புடவை வைத்திருப்பார்கள். ஏதாவது கல்யாணத்திற்கு போக வேண்டும் என்றால் கட்டிக் கொள்வார்கள். அம்மாவுக்குப் பட்டுப்புடவை வாங்கினால் எங்க எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய ஃபுல் பேண்ட் அரைக்கால் டவுசர் ஆகிவிடும். அவ்வளவுதான் வசதி.

ஏதேதோ காரணங்களால் பொறியியல் கல்லூரியில் Textile Technology படிக்க ஆரம்பித்தேன். நான்காமாண்டு படிக்கும் போது, பட்டைப் பற்றி விளாவாரியாக படிக்க வேண்டியிருந்தது. பல லட்சம் புழுக்களைக் கொன்றுதான் பட்டுநூலை சேகரிக்க வேண்டும் என்ற விபரம் தெரிந்தவுடன் அந்த பாடங்களை படிக்கும் அளவு கல் மனது இல்லைதான். அப்படியே படித்தாலும் இந்தத்துறையில் வேலைக்குப் போகக்கூடாது என்று முடிவும் செய்துவிட்டேன். ஒரு வேளை பருத்தியைக் காட்டிலும் சிறந்த நூல் பட்டா என்று பார்த்தால், பளபளப்பைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. சாயம் போட்டால் பளிச்சென்று இருக்கும். முழுக்க முழுக்க புரதத்தால் உருவாவது என்பதால் பாதுகாப்பது கூட கஷ்டம்தான். அணிந்து கொள்ள மிகவும் அசௌகரியமான உடையாக இருக்கும். தண்ணீரில் போட்டால் விரைவில் சாயம் போகும்.

மீண்டும் அதே கேள்வி, ஏன் இவ்வளவு பணம் போட்டுப் பட்டுப்புடைவை வாங்குகிறார்கள் ? நல்ல வேளை, இந்தக் கேள்வியை செமஸ்டர் தேர்வில் கேட்கவில்லை.

அப்புறம் உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, அப்பப்ப வீட்டில் திருமணம் என்று ஆரம்பித்தால் பட்டுப் புடவை எடுக்கக் கிளம்பிவிடுகிறார்கள். நானும்தான் சேர்ந்து போகிறேன். கலர், டிசைன் எல்லாம் செலக்ட் செய்ய உதவுகின்றேன். அகல வாக்கில் ஒரு நூல், நீல வாக்கில் ஒரு நூலின் ஒரு சிறு துண்டு, இரண்டையும் எடுத்துத் தீக்குச்சியின் நெறுப்பில் வைத்து எரித்து தலைமுடி கருகும் போது வருகின்ற துர்நாற்றம் வருகிறதா என்று பார்த்து, கையில் இருக்கும் பாதி எரிந்த நூலில் கங்கு கட்டாமல் இருந்தால், OK பட்டுதான் என்று சர்டிபிகேட் கொடுத்தும் விடுகிறேன். என்ன, ஒவ்வொரு புடவைக்காகவும் கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பட்டுப் புழுக்களின் ஞாபகம் மட்டும் அவ்வப்பொழுது வந்து மனதில் நெளிகிறது.


திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், ஜூன்17,2011 அன்று வெளியிட்ட 'மடிசார் புடவை பகுதி 2 ல்


" வர வர இந்தப் பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்திக்கொண்டு வருகிறது........” என்று ஆரம்பித்து கதையின் முடிவில் தன்னுடைய ஆதரவை சில்க் காட்டன் புடவைகளுக்குத் தெரியப்படுத்தியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. எத்தனை அம்மணிகள் அதைக் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

சுத்த சைவைம் என்று கூறிக்கொள்பவர்களாவது இந்த பட்டுப் புடவைகளை அணியாமல் இருக்கலாம். கொடுமை என்னவென்றால் இப்படித் தாயாரிக்கப் படும் பட்டாடைக்குத் தீட்டு இல்லையாம். வேதம் படித்த பண்டிதர்களும், திருவாசகம் படித்த பண்டிதர்களும் இப்படிச் சொல்லி பட்டு மோகத்தை அதிக்கப் படுத்தியிருப்பது நெருடலான விஷயம் தான்.

இதற்கான காரணத்தை 85 வயது பெரியவர் மணி மாமாவிடமும், 78 வயதுப் பெரியவர் சிவசுப்ரமணியன் பிள்ளை அவர்களிடமும் கேட்டேன். மணி மாமா, தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையைக் கேள்வி கேட்கப்படாது என்றார். பிள்ளை அவர்கள் வெறுமையாக ஒரு பார்வைமட்டும் பார்த்தார்.

பட்டு அரசர்கள் காலத்தில் அரச பரம்பரைக்கு உரிய உடையாக ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்ததாலும், அரசவைப் பரிசுகள் பட்டினால் ஆன துணியில் கொடுக்கப் பட்டு வந்ததாலும் இதைப் பற்றி பகுத்தறிவு விளக்கம் கொடுத்துத் தன் தலையை இழக்க எந்த அறிஞனும் துணிந்திருக்க மாட்டான். அதானால் தான் தொடர்ந்து இந்தப் பட்டுப் பாரம்பரியம் வளர்திருக்க வேண்டும்.

எது எப்படியோ, அதிக ஜரிகையுடனும், வேலைப்பாடுடனும் கூடிய பட்டுப் புடைவைகள் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன. ஆனால் திரும்ப விற்றுப் பணமாக்க முடியாது என்பது இருந்தாலும், பட்டுப்புடைவகளின் வேலைபாடும் பள பளப்பும் அதன் ராயல் லூக்கும், வாங்குபவர் கண்களை கவர்த்துவிடுகிறது. அதற்கு மேல் நமது இந்தியக் கல்லச்சாரம் புகுந்து கொண்டு என்ன விலை கொடுக்கவும் மனங்களைத் தயார் படுத்திவிடுகிறது.

ஆடம்பரச் செலவுகள் எல்லாம் ஒரு புறம் தேவையற்றதாகத் தோன்றினாலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கக் கூடியவை. பலபேருக்கு வேலை வாய்ப்பும் கிடக்கும். எனவே ஆடம்பரச் செலவுகளை தானத்தைவிடச் சிறந்த ஒன்றாகக் கருதலாம். எந்தப் பொருளையும், சேவையையும் பெற்றுக்கொள்ளாது கொடுப்பது தானம் என்றால், தானம், கொடுப்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு சேர்க்கும். வங்குபவர்களுக்குத் தன்மானம் குறைவதாக அமையும். அனால் வியாபாரம் என்று வந்துவிட்டால் இருப்பக்கமும் தன்மானக் குறைவில்லை.
பட்டு உடைகள் வாங்கிய மறு நிமிடமே, திரும்ப விற்கும் மதிப்பை இழந்து விடுகின்றன. எனவே புடவையின் விலை முழுவதும் தானம் கொடுத்தது போல் ஆகிவிடுகிறது.

தனக்கு மிஞ்சிதான் தானம் என்பதை மட்டும் நினைவில் கொள்ள முடிந்தால், அளவோடு செலவு செய்யாலாம். ஆனால் ஊடகங்களின் கைங்கர்யத்தால் இந்த நினைப்பை வரவிடாமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள். அக்ஷய திருதியை போன்ற ஒரு நாளைக் கண்டுபிடிக்க தீவிரமாக யோசனை செய்து கொண்டிருப்பார்கள். நாமத்தைப் போட்டுக்கொண்டோ அல்லது பட்டையைப் போட்டுக்கொண்டோ சாஸ்திரி ஒருவரைப் பேசவைத்து விரைவில் வெற்றியும் கொள்வார்கள்.

பட்டு என்பது ஆண்களுக்கு சவாலாகவும், அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு என்று பெண்களின் புடவை எண்ணிக்கையை உயர்த்துவதாகவும் இருந்துவரும் என்ற தெளிவு பிறந்து என் நெடு நாளைய சந்தேகமும் தீர்ந்தது.